Published : 26 Sep 2020 07:54 AM
Last Updated : 26 Sep 2020 07:54 AM

அடுத்த போட்டியில் ராயுடு வந்து விடுவார், எல்லாம் சரியாகி விடும்: தோனி சமாதானம்

ரெய்னாவை ஏதோ பிரச்சினையில் இழந்து, ராயுடுவை காயத்துக்கு இழந்து திக்கு திசை தெரியாமல் தோனியின் சிஎஸ்கே வழக்கத்துக்கு விரோதமாக ஐபிஎல் தொடரில் முதன் முதலாக ஆரம்பத்திலேயே திக்கித் திணறி வருகிறது.

தோனி ரசிகர்கள் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைபவர்கள், தங்கள் தலைவர் கேப்டன்சியில் தோல்வி என்பது அவர்களை அசைக்காது, தோனி ஒன்றிரண்டு சிக்சர்களை அடித்தால் அதுவே அவர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

இந்நிலையில் அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பவர் ப்ளேவுக்குப் பிறகே ஆட்டத்திலேயே இல்லாமல் தோற்ற சிஎஸ்கே நேற்று முற்றிலும் ஆட்டத்திலேயே இல்லாமல் போய் விட்டது.

தோனி எடுக்கும் முடிவுகளும் யுஏஇ-யில் இந்த சீசனின் ஐபிஎல் போக்குக்கு எதிராக உள்ளது. இந்த முறை 7 போட்டிகளில் 6 முறை முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், ராயுடு, ரெய்னா இல்லாத ஒரு தொள தொள வரிசையை வைத்துக் கொண்டு அதிரடி பேட்ஸ்மென்கள் நிறைந்த, அதிவேகப் பந்து வீச்சாளர்கள் நிறைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக பீல்டிங்கைத் தேர்வு செய்தார் தோனி. கடைசியில் 44 ரன்களில் தோல்வி. வெற்றி தோல்வி சகஜமே, ஆனால் ஆட்டம் விறுவிறுப்பு தன்மையை இழந்து சொதப்பலாக தொங்குவதுதான் சிஎஸ்கே அணியின் ஆட்டம் அறுவை என்ற நிலைக்குச் சென்று விடுமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது.

இந்நிலையில் நேற்றைய தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி கூறியதாவது:

பேட்டிங் பிரிவைப் பொறுத்தமட்டில் உத்வேகம் இல்லை. தொடக்கத்திலிருந்தே இல்லை. இது காயப்படுத்துகிறது. 160+ ரன்களை விரட்டுகிறோம், ரன் விகிதம் எகிறிக்கொண்டே சென்றால் மிடில் ஆர்டர் வரிசைக்குத்தான் நெருக்கடி ஏற்படும். எனவே இதனை சரிசெய்ய வேண்டும்.

ஒரு வேகப்பந்து வீச்சாளரையோ, ஸ்பின்னரையோ சேர்த்தால் பேட்ஸ்மெனுக்கு அது கூடுதல் இக்கட்டையே ஏற்படுத்தும். ராயுடு அடுத்த போட்டிக்கு வந்து விடுவார், அப்போது சரியாகிவிடும், அவர் வந்து விட்டால் வித்தியாசமான முயற்சியை செய்ய சுதந்திரம் கிடைக்கும்.

பவுலிங் பிரிவைப் பொறுத்தவரை சீரான முறையில் வீசுவதில்லை. ஸ்பின்னர்கள் இன்னும் தொடருக்குள் புகவில்லை என்றே நினைக்கிறேன். பவுலர்களை மாற்றிவிட்டால் பிரச்சினை சரியாகி விடாது.

அடுத்த 7 நாட்களுக்கு எங்களுக்கு ஒரு நல்ல இடைவேளை கிடைத்துள்ளது. வீரர்களுக்கு இன்னும் கொஞ்சம் உண்மையான போட்டி போன்ற சூழ்நிலையை பயிற்சியில் உருவாக்கி ஆட வைத்து இன்னும் தெளிவுபெற வைக்க வேண்டும். இதன் மூலமே சிறந்த அணிச்சேர்க்கை எது என்றும், ஒவ்வொருவரும் எப்படி பங்களிக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும்.

ஒட்டுமொத்தமாக லைன், லெந்த், வேகம் ஆகியவற்றில் இன்னும் கொஞ்சம் சீரான தன்மை ஏற்பட வேண்டும். அப்போதுதான் அணித்தேர்வை தீர்மானம் செய்ய முடியும். வேகப்பந்து வீச்சில் ஏதோ சீராக இருக்கிறோம் என்று அர்த்தமல்ல. நல்ல பந்துகளை வீசுகிறோம் இடையிடையே பவுண்டரி பந்துகளை வீசுகிறோம்.

மைதானம் பெரிய மைதானம் லைன் லெந்தில் சீராக இருக்க வேண்டும். பேட்ஸ்மென்கள் பெரிய ஷாட்களை ஆடட்டும் பரவாயில்லை, அதிகமாக இப்படிவீச வேண்டும் அப்படி வீச வேண்டும் என்று அதிகமாக மாற்றி கொண்டேயிருந்தால் அவர்களுக்கு பவுண்டரி வாய்ப்புதான் அதிகரிக்கும்.

இவ்வாறு கூறினார் தோனி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x