Published : 25 Sep 2020 04:17 PM
Last Updated : 25 Sep 2020 04:17 PM

பும்ரா பந்து வீச்சு தாக்கமா? தேக்கத்தின் தொடக்கமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் பும்ரா 4 ஓவர்களில் 43 ரன்களை வாரி வழங்கினார். இதோடு இந்தப் போட்டியிலேயே அதிக ரன்களைக் கொடுத்த பவுலராகவும் பும்ரா திகழ்ந்தார்.

பும்ரா காயத்திலிருந்து மீண்ட பிறகே அவரது பந்து வீச்சு தாக்கமிழந்து தேக்க நிலைக்குச் சென்றதைப் பார்த்தோம், இவர் என்றுஇல்லை உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களெல்லாம் காயத்துக்கு முன் கிங், காயத்துக்குப் பின் ஸ்விங் என்று மாறி விடுவார்கள். வேகம் அடி வாங்கியிருக்கும்.

பும்ராவுக்கும் அதுதான் நடந்தது. இந்நிலையில் 2வது போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக சிறந்த பந்து வீச்சை வீசியது போல் தெரிந்தது. அவர் நன்றாக வீசியது தாக்கமல்ல, ஒரு பிறழ்வே (aberration).

அன்று அவர் கொல்கத்தாவுக்கு எதிராக 24 பந்துகளில் 15 பந்துகளை காட்டடி மன்னர்களான ஆந்த்ரே ரஸல், சுனில் நரைன், இயான் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு வீசி 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார், இது மிகவும் அற்புதமான பந்து வீச்சுத்தான் இல்லை என்று மறுக்க முடியாது.

சரி பும்ரா தன் பழைய பவுலிங்குக்குத் திரும்பி விட்டார், அடுத்து வரும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணியை திக்குமுக்காடச் செய்யும் திறமை அப்படியே இருக்கிறது, காயத்தினால் இது போகவில்லை என்று நிம்மதியடைந்த நிலையில் நம் கணிப்பை முறியடிக்கும் விதமாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கமின்ஸுக்கு ஒரே ஓவரில் 27 ரன்களை விட்டுக் கொடுத்தார். கமின்ஸ் 4 சிக்சர்களை விளாசித்தள்ளினார். இது பிறழ்வு அல்ல, முதலில் ரஸல், மோர்கன், நரைன், தினேஷ் கார்த்திக்குக்கு அவர் நன்றாக வீசினாரே அதுதான் பிறழ்வு.

இது பேரதிர்ச்சியாக இருந்தது, சரி! அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 18 பந்துகளில் 84 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது வேறு விஷயம்.

ஆனாலும் உலகின் தலைசிறந்த ஒரு தற்கால பவுலர் இன்னொரு தலை சிறந்த பேட்ஸ்மெனுக்கு, வீசி அவர் 4 சிக்சர்களை அடித்தார் என்றால் சரி என்று விட்டு விடலாம், ஆனால் கமின்ஸ் போன்ற ஒரு பின் கள வீரர், ஒரு பவுலர் 4 சிக்சர்கள் பும்ராவை அடிக்கிறார் என்றால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஒரு சிறந்த பவுலர், இன்னொரு பவுலர் ஸ்டம்புகளைப் பெயர்த்திருக்க வேண்டாமா?அதைச் செய்யவில்லை பும்ரா.

அதனால்தான் அவர் பவுலிங்கில் ஒரு நம்ப முடியாத் தன்மை காயத்துக்குப் பிறகு புகுந்து கொண்டிருக்கிறது, இந்தப் போக்கை அவர் சரிசெய்யவில்லை எனில், ஆஸ்திரேலியா தொடரில் இவரை ஆஸி.பேட்ஸ்மென்கள் கதறடித்து விடுவார்கள்.

எப்போது ஒரு பவுலர் 3 ஓவர்களை நன்றாக வீசிவிட்டு 4வது ஓவரில் ஒரு பவுலருக்கு 4 சிக்சர்களை அளிக்கிறாரோ அப்போதே அவரிடம் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளதை நாம் அறிய முடிகிறது.

ஆகவே அவர் பந்து வீச்சு கொல்கத்தாவுக்கு எதிராக தாக்கம் செலுத்தியது என்பதை விட தேக்கத்தின் தொடக்கமாக இருக்குமோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. ஏனெனில் 24 பந்துகளில் 14 பந்துகள் டாட் பால்கள் என்றால் மீதமுள்ள 10 பந்துகளில் 32 ரன்களைக் கொடுத்துள்ளார், இதில் 6 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 27 ரன்கள் கொடுக்கிறார் என்றால் அவரது சீரான பந்து வீச்சு தன்மையில் எங்கோ பிறழ்வு ஏற்பட்டுள்ளது எனே அர்த்தம்.

இதிலிருந்து பும்ரா மீண்டு தன் பழைய ரிதம், வேகத்துக்குத் திரும்பா விட்டாலும் சீரான முறையில் வீசி பேட்ஸ்மென்களை ஒர்க் அவுட் செய்து துல்லியமான லெந்தில் வீச முயற்சி செய்து ஆஸ்திரேலியாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த வேண்டும் என்பதே நம் விருப்பம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x