Last Updated : 23 Sep, 2020 12:51 PM

 

Published : 23 Sep 2020 12:51 PM
Last Updated : 23 Sep 2020 12:51 PM

தரையில் பட்டு கேட்ச் எடுத்த தோனி்; அவுட் தீர்ப்பை மாற்றிய மூன்றாவது நடுவர்: தொடரும் நடுவரின் குளறுபடிகள்

சிஎஸ்கே கேப்டன் தோனிி : கோப்புப்படம்

ஷார்ஜா

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாம் கரனுக்கு தரையில் பட்டு வந்த பந்தை தோனி கேட்ச் எனப் பிடித்ததற்கு கள நடுவர் அவுட் அளித்தார். பின்னர் மூன்றாவது நடுவரின் தீர்ப்பில் அவுட் இல்லை எனத் தெரிந்தவுடன் நடுவர் தீர்ப்பை மாற்றினார்.

ஷார்ஜாவில் ராஜஸ்தான் ராயல்ஸ், சிஎஸ்கே அணிகள் மோதும் ஆட்டம் நேற்று நடந்தது. தொடக்கத்திலிருந்தே ஸ்மித், சாம்ஸன் இருவரும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கியதால் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. சாம்ஸன் ஆட்டமிழந்தபின் அடுத்தடுத்து விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின.

சாம் கரன் வீசிய 17-வது ஓவரில் ராகுல் திவேஷியா கால்காப்பில் வாங்கியதற்கு நடுவர் அவுட் அளித்தார். ஆனால், திவேஷியா டிஆர்எஸ் முறைக்குச் சென்றார். ஆனால், டிஆர்எஸ் ரிவியூவில் அது அவுட் என உறுதி செய்யப்பட்டது.

இதனால் ராஜஸ்தான் அணிக்கு இருந்த ஒரு டிஆர்எஸ் ரிவியூ அப்பீல் முடிந்தது.
6-வது விக்கெட்டுக்கு டாம் கரன் களமிறங்கினார். தீபக் சாஹர் வீசிய 17-வது ஓவரின் 5-வது பந்து டாம் கரனின் தொடையில் பட்டு தோனி கேட்ச் பிடித்தார், இதற்கு நடுவரும் அவுட் அளித்தார்.

ஆனால், டிவி ரீப்ளேயில் அந்த பந்து தோனி கேட்ச் பிடிப்பதற்கு முன் தரையில் பட்டது, தரையில் பட்ட பின் தோனி கேட்ச் பிடித்தது தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும் நடுவர் கவனிக்காமல் அவுட் அளித்தார்.
ராஜஸ்தான் அணியிடம் டிஆர்எஸ் ரிவியூ இல்லாததால் டாம் கரன் வெளிேயறத் தொடங்கினார். ஆனால், மூன்றாவது நடுவர் தலையிட்டு அவுட்டை ஆய்வுக்கு உட்படுத்தினார்.

ஆனால், இதைப் பார்த்துக் கொண்டிருந்த தோனி நடுவரிடம் ஏதோ வாக்குவாதம் செய்தார். சிறிது நேரத்தில் அது அவுட் இல்லை எனத டிவி ரீப்ளேயில் தெரிந்தவுடன் மீண்டும் டாம் கரன் விளையாட அனுமதிக்கப்பட்டார்.

ஜென்டில்மேன் கேம் எனப்படும் கிரிக்கெட்டில் பெயருக்கு ஏற்றார்போல் விளையாடக் கடியவர் தோனி. ஆனால், தரையில் பட்டு கேட்ச் பிடித்தது விக்கெட் கீப்பருக்கு தெரியாமல் இருந்திருக்காது.

அப்படியிருக்கும் அதை வெளிப்படையாக தோனி அவுட் இல்லை என அறிவித்திருக்க வேண்டும். ஆனால், நடுவர் அவுட் அளித்தபின் அதை மகிழ்ச்சியுடன் தோனி ஏற்றது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

மூன்றாவது நடுவர் ஆய்வுக்கு உட்படுத்தும்போது, அது குறி்த்து நடுவரிடம் வாதிட்டதும் ஏன் எனத் தெரியவில்லை.


ஜென்டில்மேன் விளையாட்டுக்கு உரித்தானவர் தோனி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்திய அணிக்கு தோனி கேப்டனாக இருந்தபோது பல தருணங்களில் தனது பெருந்தன்மையை தோனி வெளிப்படுத்தியுள்ளார்.

அதற்கு முக்கியமான சான்று, இந்திய அணி இங்கிலாந்து பயணத்தின் போது நடந்த டெஸ்ட் போட்டியில் இயான் பெல் சதத்தை கடந்து விளையாடிக்கொண்டிருந்தார்.

இசாந்த் சர்மா வீசிய பந்தை பெல் பவுண்டரிக்கு அடித்தார் பந்து பவுண்டரிக்கு சென்றுவிட்டது என்பதை உணர்ந்து பெல் ெமதுவாக நடந்து வந்தார். தேநீர் இடைவேளையும் வந்தது. ஆனால், பந்து பவுண்டரிக்கு செல்லவில்லை. பந்தை பீல்டிங் செய்த பிரவீண்குமார் அதை எடுத்து வீச பெல் ரன் அவுட் செய்யப்பட்டார். மூன்றாவது நடுவரும் அதை அவுட் என்று உறுதி செய்ததால் பெல் வெளியேறினார்.

ஆனால் தேநீர் இடைவேளை முடிந்தபின் மீண்டும் பெல் விளையாட வந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. தோனி நடுவரிடம் இயான்பெல் ரன் அவுட் முறையீட்டை வாபஸ் பெற்று, இயான் பெல் தேநீர் இடைவேளைக்காகச் சென்றார் ஆனால், அதை கவனிக்காமல் ரன் அவுட் செய்துள்ளார்கள் என்று தெரிவித்தார். தோனியின் இந்த அறம் சார்ந்த பெருந்தன்மையை இங்கிலாந்து பத்திரிகைகள் புகழ்ந்து எழுதின.

ஆனால், அப்படிப்பட்ட தோனி, நேற்றைய போட்டியில் பந்து தரையில் பட்டு பிடித்தபின்பும், அதை நடுவரிடம் அவுட் இல்லை என சொல்ல முடியாமல் தவித்தது ஏனோ தெரியவில்லை.
சில நேரங்களில் தோனிக்கு தெரியாமல் கூட தரையில் பட்டு கேட்ச் பிடித்தருக்கலாம். ஆனால், அதை டிவி ரீப்ளேயில் பார்த்தபின்பும் நடுவரிடம் வாதிட்டது அறத்தின் அடிப்படையில் சரியாகுமா என்ற கேள்வி எழுகிறது.

தோனியை மட்டும் இந்த இடத்தில் குறை கூறிவிட முடியாது. களநடுவரும் தான் முடிவை அறிவிக்கும் முன் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற குழப்பங்களும், தவறுகளும் நேர்ந்துவிடும்.

தோனியில் தரையில் பட்டு கேட்ச் பிடித்தார் எனும் விவரத்தை கிரிக்இன்போ இணையதளமும் தனது வர்ணனையின் பகுதியில் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டி தொடங்கிய 4-வது போட்டியிலேயே நடுவரின் தவறான முடிவுகளால் ஏற்படும் சர்ச்சை தொடங்கிவிட்டது. கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி வீரர் ஜோர்டான் 2 ரன்களில் ஓடும் போது கிரீஸை சரியாகத் தொடவில்லை எனக் கூறி நடுவர் ஒரு ரன்னை ரத்து செய்தார்.

இதனால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று பஞ்சாப் அணிதோற்றது. நடுவரின்முடிவு தவறானது என ரீப்ளேயில் தெரிந்தபின், பஞ்சாப் அணி ஐபிஎல் நிர்வாகக்குழுவில் முறையிட்டுள்ளது. இப்போது 2-வது சர்ச்சை உருவாகியுள்ளது.

கிரிக்கெட் என்பது பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டாக இருந்தாலும்கூட, அதிலும் அறம் கடைபிடிக்கப்பட வேண்டியது அவசியம். அந்த அறத்தை கடைபிடிக்கும் மனிதர்களில் ஒருவராக தோனி கடந்த காலங்களில் பலமுறை இருந்திருக்கிறார், ரசிகர்களால் புகழப்பட்டுள்ளார்.

ஆனால், வர்த்தகரீதியிலான ஐபிஎல் போட்டியில் வெற்றியையும், பணத்தையும் விரட்டிச் செல்லும் போது, தோனியைக் கூட அறத்தை மறந்து செயல்படவைத்துவிட்டதோ என்ற கேள்வியையும் எழுப்புவது வேதனையைத் தருகிறது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x