Published : 23 Sep 2020 11:35 AM
Last Updated : 23 Sep 2020 11:35 AM

9 சிக்சர்களுடன் 32 பந்தில் 74, 2 ஸ்டம்பிங், 2 கேட்ச்கள்; நின்ற இடத்திலிருந்து அடி, அதைத்தான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்; சஞ்சு சாம்சன்

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஸ்பின் தாதாவாகத் தன்னை நம்பிக்கொண்டிருக்கும் சென்னையின் ஸ்பின்னர்களை தூள் தூளாக்கிய சஞ்சு சாம்சன், 2 கேட்ச்கள், 2 ஸ்டம்பிங்குகள் என்று விக்கெட் கீப்பராகவும் அசத்தி, இந்திய அணியின் கதவுகளை ரவிசாஸ்திரியும் கோலியும் தனக்குத் திறப்பார்களா என்ற மெசேஜை அனுப்பியுள்ளார்.

தோனியே சஞ்சுவின் திறமைகளைப் பாராட்டி பேசியுள்ளார். ஜடேஜா, பியூஷ் சாவ்லாவை பின்னி எடுத்து சிக்சர்மழை பொழியத் தொடங்கினார். 4 ஓவர்களில் 26 என்று இருந்த ராயல்ஸ் ஸ்கோர் 10 ஓவர்களில் 119 என்று ராயலாகச் சென்று கொண்டிருந்தது.

ஸ்டார் பிளேயர்கள், மற்றும் ஐபிஎல் பிராண்டுகளான ரோஹித் சர்மா, விராட் கோலி, எம்.எஸ்.தோனி ஆகியோர் இதுவரை சொதப்பியே வருகின்றனர். ராயுடு, சஞ்சு சாம்சன் போன்ற ஸ்டார் அல்லாத வீரர்கள் நன்றாகத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் சஞ்சு சாம்சன் ஒரு தாக்கம் ஏற்படுத்தும் வீரர். ஒவ்வொரு ஹிட்டும் க்ளீன் ஹிட். ஸ்மித் கூறியது போல் அடித்த ஒவ்வொரு ஷாட்டுமே சிக்ஸ் என்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியது. இந்நிலையில் பட்லர் வந்து விட்டால் யார் ராஜஸ்தான் விக்கெட் கீப்பர் என்ற ஆரோக்கியச் சிக்கல் அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஆட்டம் முடிந்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக் கூறியதாவது:

இன்றைய டி20 ஆட்டங்கள் பலதரப்பட்ட ஷாட்களை ஆட நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறது. இந்த 5 மாதங்களாக திறனை வளர்ப்பதில் செலவிட்டேன், இப்போது திறமையை அதிகரித்துள்ளேன் என்று நினைக்கிறேன்.

எனது ஃபிட்னெஸ், உணவுமுறை, பயிற்சி, பலம் ஆகியவற்றில் நிறைய கடின உழைப்பை இட்டேன் ஏனெனில் என் ஆட்டம் பவர் ஹிட்டிங்கை நம்பித்தான் உள்ளது.

என் ஆட்ட திட்டம் என்னவெனில் நின்ற இடத்திலிருந்து ஷாட்களை ஆடுவது, லெந்தில் இருந்தால் அடி. அடிக்க வேண்டிய இடத்தில் பந்து விழுந்தால் அடி என்பதுதான் என் கவனம் குறிக்கோள் எல்லாம்.

ஃபுல் லெந்த் பந்துகள் சில விழுந்தது என் அதிர்ஷ்டம். முதல் பந்திலிருந்தே அடிப்பதில்தான் கவனம்.

எனக்கு விக்கெட் கீப்பிங் மிகவும் பிடிக்கும், யாருக்கு பீல்டிங்கில் ஓடிக்கொண்டிருக்க பிடிக்கும். யார் விக்கெட் கீப்பர் என்பதை கேப்டனும், பயிற்சியாளரும் தீர்மானிப்பார்கள்.

ரசிகர்கள் முகத்தில் புன்னகையை கொண்டு வந்துள்ளோம், தொடர்ந்து இதைச் செய்வோம் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு கூறினார் சஞ்சு சாம்சன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x