Last Updated : 21 Sep, 2020 12:32 PM

 

Published : 21 Sep 2020 12:32 PM
Last Updated : 21 Sep 2020 12:32 PM

‘நடுவருக்கே ஆட்ட நாயகன் விருது கொடுத்திருக்கலாம்’: பஞ்சாப் அணிக்கு அநீதி இழைத்ததால் வறுத்தெடுத்த சேவாக் 

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி்க்கு அநீதி இழைத்து ஒரு ரன் தரமால் செய்த நடுவர் நிதின் மேனனுக்கே ஆட்டநாயகன் விருது கொடுத்திருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்்த்து மோதியது டெல்லி கேபிடல்ஸ். முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி20 ஓவர்ளில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்ததால் ஆட்டம் சமனில் முடிந்து சூப்பர் ஓவருக்குச் ெசன்றது.

சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி சொதப்பியது. சூப்பர் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து இருவிக்கெட்டுகளை பஞ்சாப் அணி இழந்தது. 3 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில் டெல்லி கேபிடல்ஸ் எளிதாக வெற்றியைச் சுவைத்தது.

இந்த ஆட்டத்தில் ஒரு ரன் கூடுதலாக எடுக்காமல் போனதால் ஆட்டம் சமனில் முடிந்தது. ஆனால் சூப்பர் ஓவருக்கு முன்பாக, மயங்க் அகர்வாலும், ஜோர்டானும் களத்தில் இருந்தனர்.

ரபாடா வீசிய 19-வது ஓவரைச் சந்தித்த ஜோர்டான் ஸ்குயர் லெக் திசையில் தட்டிவிட்டு இரு ரன்கள் ஓடினார். அப்போது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த லெக் அம்ப்யர் நிதின் மேனன் வேகமாக ஓடிவந்தார். ஜோர்டன் 2-வது ரன் ஓடும்போதுக் கிரீசை சரியாகத் தொடவில்லை. ஆதலால், ஒரு ரன் மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

எல்லைக் கோட்டைத் தொட்ட ஜோர்டன் : சேவாக் ட்விட்டரில் வெளியிட்ட படம்

ஆனால், மூன்றாவது நடுவர் டி.வி. ரீப்ளேயில் பார்த்தபோது, ஜோர்டன் தான் ஓடிய இரு ரன்களையும் கிரீசுக்கு உள்ளே பேட்டை வைத்து தொட்டுவிட்டுத்தான் ஓடியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அப்படியானால், நடுவரின் தவறான தீர்ப்பால் ஒரு ரன் பஞ்சாப் அணிக்கு வேண்டுமென்றே மறுக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு ரன் கிடைத்திருந்தால், பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றிருக்கும்.

இந்த ஒருரன் இல்லாமல் போனதால்தான் ஆட்டம் சமனில் முடிந்து, சூப்பர் ஓவருக்குச் சென்று, பஞ்சாப் அணி தோற்றது. நடுவரின் தவறான தீர்ப்பு பஞ்சாப் அணியின் தோல்விக்கு காரணமாகியுள்ளது.

நடுவரின் தவறான தீ்ர்ப்புக் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர சேவாக் ட்வி்ட்டரில் கடுமையாக விளாசியுள்ளார் . அதில் “ ஆட்ட நாயகன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவிதத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஜோர்டான் இரு ரன்கள் ஓடியதில் அதில் ஒரு ரன்னை மறுத்து அறிவித்த நடுவருக்குத்தான் ஆட்ட நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் நடுவரின் முடிவை கண்டித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “ ஒரு ரன் குறைவாக வழங்கியிருக்கக் கூடாது. இதுபோன்ற குழப்பமான நேரத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். மூன்றாவது நடுவர் பார்க்க முடிந்தால் மட்டுமே தவறைக் கண்டறிவது சாத்தியம். இந்த 2 புள்ளிகளை தவறவிட்டால், சூப்பர் லீக் சுற்றுக்கு பஞ்சாப் அணி தகுதிபெற முடியாமல் போனால் என்ன செய்வது” எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணி நிர்வாகம் ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் முடிவை மாற்றக் கோரி முறையீடு செய்ய முடியும்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நடிகை ப்ர்தித் ஜிந்தாவும் நடுவரின் தவறான முடிவைக் கண்டித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்ட கருத்தில் “ கரோனா வைரஸ் பரவல் காலத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பயணித்து துபாய் வந்து, 6 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டேன். 5 முறை கரோனா பரிசோதனையும் எனக்கு எடுக்கப்பட்டது. ஆனால், ஒரு ரன் குறைவாக கொடுக்கப்பட்டது எனக்கு வேதனையைத் தருகிறது.

இதுபோன்ற சூழலில் பயன்படுத்தாவிட்டால் தொழில்நுட்பம் இருப்பதில் என்ன அர்த்தம். இந்த ேநரத்தில் பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்று நடக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x