Published : 19 Sep 2020 04:05 PM
Last Updated : 19 Sep 2020 04:05 PM

நான் ஏன் பொறுமை இழக்க வேண்டும்? ஆஸி.யை பொறுமையிழக்கச் செய்வோம்..: சிட்னி 241 நாட் அவுட் இன்னிங்ஸ் பற்றி சச்சின் பகிர்வு

2004ம் ஆண்டு கங்குலி தலைமையில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி ஸ்டீவ் வாஹ் ஓய்வு பெறும் அந்தத் தொடரில் அவருக்கு டெஸ்ட் தொடர் வெற்றியை மறுத்து 1-1 என்று தொடரைச் சமன் செய்தது. இது ஸ்டீவ் வாஹ் தலைமை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாதனை என்றே கூற வேண்டும்.

விராட் கோலி தலைமையில் வார்னர், ஸ்மித் இல்லாத நொந்து நூலான ஆஸி. அணியை 2-1 என்று விராட் கோலி ஜெயித்ததை விட 2004 தொடர் சமன் செய்தது மிகப்பெரிய வெற்றிக்குச் சமமானதாகும்.

அந்தத் தொடரில் லஷ்மண், திராவிட், சேவாக் கலக்கு கலக்கென்று கலக்க சச்சின் டெண்டுல்கர் சரியாக ஆடவில்லை, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே போட்டு அவரை தட்டிப்போட்டு எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் சிட்னியில் கவர் ட்ரைவையே ஆடக்கூடாது என்ற முடிவில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துக்கு மட்டை வாசனையை காட்டக்கூடாது என்று சச்சின் டெண்டுல்கர் முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது, அந்த இன்னிங்சில் சச்சின் 241 நாட் அவுட்.

அந்த இன்னிங்ஸ் குறித்து அதே தொடரில் சேவாகுடன் தொடக்கத்தில் களமிறங்கி தைரியமாக ஆடிய ஆகாஷ் சோப்ரா தன் யூடியூப் சேனலில் சச்சினைப் பேட்டி கண்டார்.

அதில் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

இது ஒரு பெரிய கதை, ஏனெனில் நான் ஆஸ்திரேலியா செல்லும் முன் இந்தியாவில் நியூஸிலாந்து, ஆஸி. தொடர்களில் நல்ல டச்சில் இருந்தேன். ஆனால் பிரிஸ்பன் டெஸ்ட்டில் எனக்கு தவறான தீர்ப்பளிக்கப்பட்டது, இது என்னை காயப்படுத்தியது. ஒரு முக்கியமான தொடரில் எடுத்த எடுப்பிலேயே நாட் அவுட்டை அவுட் கொடுக்கும் போது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது.

அதன் பிறகு 2வது டெஸ்ட் போட்டியில் நான் நன்றாக ஆடினேன். 2வது இன்னிங்சில் 38 ரன்கள் எடுத்தேன் ராகுல் திராவிட்டுடன் ஒரு முக்கியக் கூட்டணி அமைத்தோம், அந்த டெஸ்ட் போட்டியில் வென்றோம், மிகவும் அருமையான டெஸ்ட் அது.

மெல்போர்னில் 40+ ஸ்கோரில் நன்றாக ஆடிகொண்டிருந்தேன். ஆனால் நன்றாக ஆடிக்கொண்டிருக்கும் போது வீழ்ந்து விடுகிறேன் என்ரு என்னைப் பற்றி கூறினார்கள் அது நடந்தது.

அப்போதுதான் வழக்கம் போல் என் அண்ணனுடன் நான் விவாதித்தேன், ஒவ்வொரு போட்டி முடிவிலும் நான் அவுட் ஆன விதம், ஆடியவிதம் குறித்து என் அண்ணனுடன் விவாதிப்பேன். இந்தத் தொடரில் என் அண்ணன் என்ன கூறினார் என்றால் உத்தி ரீதியாகப் பிரச்சனையில்லை, ஆனால் மனரீதியாக, ஷாட் தேர்வு சரியில்லை என்றார். எந்த ஷாட்டில் ஆட்டமிழந்தேன் என்பதை ஆராய என் சகோதரர் கூறினார். கூறியதோடு சிட்னியில் நான் எந்த பவுலராலும் வீழ்த்தப்பட கூடாது நாட் அவுட்டாக இருக்க வேண்டும் என்றார்.

எனவே கவர் ட்ரைவ் ஆடக்கூடாது என்ற திட்டமெல்லாம் ஒன்றுமில்லை, ஆஸி. பவுலர்கள் என் பொறுமையை சோதித்தனர். அப்போதுடான் என் மனதில் ஒன்று உதித்தது, நாம் எதற்குப் பொறுமை இழந்து அவுட் ஆக வேண்டும், 11 ஆஸி. வீரர்களை பொறுமை இழக்கச் செய்வோம் அதனால் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த பந்து அனைத்தையும் தொடவில்லை. எனக்கு கவர் ட்ரைவ் ஆட வேண்டும் என்று சபலம் ஏற்படும் ஆனால் அதற்கு மனத்தில் தடை விதித்தேன். அதனால் ஆடவில்லை.

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x