Last Updated : 19 Sep, 2020 02:15 PM

 

Published : 19 Sep 2020 02:15 PM
Last Updated : 19 Sep 2020 02:15 PM

சுரேஷ் ரெய்னா புதிய திட்டம்: ஜம்மு காஷ்மீர் ஆளுநருடன் திடீர் சந்திப்பு

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவைச் சந்தித்த சுரேஷ் ரெய்னா | படம் உதவி: ட்விட்டர்

ஸ்ரீநகர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியைத் தொடங்க உள்ளார். மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் இருந்து இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் பயிற்சி அகாடமி தொடங்கப்படுகிறது என்று மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த மாதம் 15-ம் தேதி ஓய்வுபெற்ற சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களால், ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார். இந்நிலையில், காஷ்மீர் நகருக்கு நேற்று சுரேஷ் ரெய்னா சென்று, மாநிலத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, காவல் டிஜிபி தில்பாக் சிங் ஆகியோரைச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, மாநில இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்கப்படுத்தும் வகையில் கிரிக்கெட் பயிற்சி அகாடமி தொடங்குவது குறித்து ரெய்னா ஆலோசித்துள்ளார். அதற்குத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியைத் தொடங்க சுரேஷ் ரெய்னா சம்மதித்துள்ளார் என்று மாநில நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் துணைநிலை ஆளுநர் கேட்டுக்கொண்டதையடுத்து, காஷ்மீர், ஜம்மு மண்டலத்தில் மட்டும் தலா 5 கிரிக்கெட் பயிற்சி அகாடமிகள் தொடங்கவும், சுரேஷ் ரெய்னா ஒப்புக்கொண்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்க முன்வந்துள்ள சுரேஷ் ரெய்னாவுக்குத் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மாநிலத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை வளர்க்க அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. விளையாட்டு, கல்வியை இளைஞர்களுக்குத் தரமாக அளித்தால், அவர்கள் தவறான பாதைக்குச் செல்லமாட்டார்கள் என்று ரெய்னாவிடம் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜம்மு காஷ்மீர் காவல் டிஜிபி தில்பாக் சிங்கை சுரேன் ரெய்னா அவரின் அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது, ஜம்மு காஷ்மீர் மாநில இளைஞர்களின் நல்வாழ்வுக்காக போலீஸார் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்தும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த போலீஸார் செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்தும் ரெய்னா கேட்டறிந்தார்.

அப்போது டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், “ரெய்னா தொடங்கும் கிரிக்கெட் பயிற்சி அகாடமியால், மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் செயல்திறனை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்துவார்கள். தவறான பாதைக்குச் செல்லமாட்டார்கள்” என நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x