Last Updated : 11 Sep, 2020 06:50 PM

 

Published : 11 Sep 2020 06:50 PM
Last Updated : 11 Sep 2020 06:50 PM

கரோனாவிலிருந்து குணமடைந்த சிஎஸ்கே அணி வீரர் தீபக் சாஹர் பயிற்சியில் ஈடுபட பிசிசிஐ அனுமதி

கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு நடத்தப்பட்ட இரு பரிசோதனையிலும் கரோனா இல்லை என உறுதியானது. இதனால் அவரை பயிற்சியில் ஈடுபடுவதற்கு பிசிசிஐ அமைப்பு அனுமதியளித்ததைத் தொடர்ந்து இன்று முதல் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

13-வது ஐபிஎல் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்கி, நவம்பர் 10-ம் தேதி வரை நடக்கிறது. இதற்காக 8 அணிகளும் கடந்த மாதம் 20-ம் தேதிக்குப்பின் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுவிட்டன.

இதில் அனைத்து அணிகளும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோது வீரர்களுக்கு நடத்தப்பட்டது. இந்தப் பரிசோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் கெய்க்வாட், தீபக் சாஹர் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து, 13 பேரும் வேறு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர். இதில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹருக்கு இரு முறை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் இரு முறையும் கரோனா இல்லை எனத் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ வழிகாட்டு விதிகள்படி, தீபக் சாஹருக்கு நுரையீரல் மற்றும் இதய பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை எனத் தெரியவந்தது.

இதையடுத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான வீரர்கள் பயிற்சி பெறும் பகுதிக்குள் புதன்கிழமை செல்ல தீபக் சாஹர் அனுமதிக்கப்பட்டார் ஆனால், பயிற்சியில் ஈடுபடவில்லை. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி அனுமதி கிடைத்துள்ளதையடுத்து இன்று முதல் தீபக் சாஹர் பயிற்சியில் ஈடுபடுகிறார்.

இதுகுறித்து சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில் “ தீபக் சாஹர் இன்று முதல் பயிற்சியில் ஈடுபடுகிறார். பிசிசிஐ அமைப்பிடம் இருந்து முறைப்படி அனுமதி கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக சிஎஸ்கே அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

முதல் போட்டியை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளோம். எங்கள் அணியின் மூத்தவீரர்கள் இருவரை இந்த முறை இழக்கிறோம். ஆனால், அதேநேரத்தில் மற்ற வீரர்கள் ஒன்று சேர்ந்து நிரூபித்துக்காட்ட வேண்டிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. எங்களிடம்இருக்கும் வீரர்கள் மூலம் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன். ” எனத் தெரிவித்தார்.

வரும் 19-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதுகிறது சிஎஸ்கே அணி என்பது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே அணியின் மற்றொரு வீரரான கெய்க்வாட்டுக்கு நாளை பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த தொடரில், சிஎஸ்கே அணியின் சார்பில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x