

காலி மைதானங்களில் ஆடுவது விசித்திரமான ஒரு அனுபவமாக இருந்தாலும் முதல் முறையாக இங்கிலாந்து ரசிகர்கள் என்னை வசைபாடவில்லை என்பது ஆறுதலாக உள்ளது என்று ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 163 ரன்களை எதிர்த்து ஆடும்போது ஆஸ்திரேலியா 98/1 பிறகு 124/1 என்ற நிலையில் பெரும் சரிவு கண்டு தோல்வி 160 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டு 2 ரன்களில் தோல்வி தழுவியது. இதில் வார்னர் 58 ரன்களை எடுத்து சரிவில் ஒரு வீரராக ஆர்ச்சரின் யார்க்கரில் பவுல்டு ஆகி வெளியேறினார்.
“இங்கிலாந்தில் முதல் முறையாக ரசிகர்களின் வசையிலிருந்து தப்பினேன். இதுவும் நன்றாகவே இருந்தது. ரசிகர்கள் பார்வையிலிருந்து பார்த்தால் ஆளில்லாமல் ஆடுவது விசித்திரமான அனுபவம்தான்.
ரசிகர்கள் இருந்தால்தான் அவர்களுக்கு ஈடுகொடுத்து ஆட முடியும். அதனால்தான் உள்நாட்டு சாதகமும் உண்டு வெளிநாட்டுச் சாதகமும் உண்டு.
மீண்டும் 6 மாதங்களுக்குப் பிறகு கிரிக்கெட் ஆடுவதற்கு கிடைத்த வாய்ப்புக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
இறுதி ஓவர்களில் இங்கிலாந்து அருமையாக வீசினர். கொஞ்சம் சவுகரியமாகவே அவர்கள் எங்களை வீழ்த்தி விட்டனர்.
பவுண்டரிகளை அடிப்பது எப்படி என்பதை திட்டமிட வேண்டும். ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதோடு மிடில் ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்க வேண்டும்” என்றார் டேவிட் வார்னர்.