Last Updated : 21 Aug, 2020 05:48 PM

 

Published : 21 Aug 2020 05:48 PM
Last Updated : 21 Aug 2020 05:48 PM

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, ரோஹித் சர்மாவுக்கு கேல் ரத்னா விருது: 27 வீரர்களுக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு: சாக்ஸி, மீராபாய்க்கு ஏமாற்றம்

தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு : கோப்புப்படம்

புதுடெல்லி


தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்தியகிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு விளையாட்டுத்துறையில் உயர்ந்த விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரைத் தவிர்த்து, மல்யுத்த வீராங்கனை வினிஷ் போகட், மகளிர் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மாணிக் பத்ரா ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக முதல்முறையாக விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் 29-ம் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறுவதற்கு பதிலாக, காணொலி மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டு விருதுக்கான வீரர்களைத் தேர்வு செய்ய வீரேந்திர சேவாக், , ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் உள்ளிட்ட 12 பேர் இடம் பெற்றனர். இந்த குழுவினர் நேற்று இறுதிப்பட்டியலைத் தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பினர்.

இதில் முதன்முதலாக விளையாட்டுத்துறையில் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இதுவரையில்லாத வகையில் 5 வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர், பரிந்துரைக்கப்பட்ட 5 பேருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ராஜீவ் கேல்ரத்னா விருது சிந்து, ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், துப்பாக்கிசுடும் வீரர் ஜித்துராய், மல்யுத்த வீராங்கனை சாக்ஸி மாலிக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்ற கிரிக்கெட் வீரர்களில் 4-வது வீரர் ரோஹித் சர்மா ஆவார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகியோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருதை 1998-ல் முதன்முதலாக சச்சினும், 2007ம் ஆண்டில் தோனியும், 2018-ல் கோலியும், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவும் சேர்ந்து பெற்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் தங்கவேலு மாரியப்பன் 2016-ம் ஆண்டு ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் டி42 பிரிவு உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார். அவரின் சாதனையைப் பாராட்டி கேல்ரத்னா விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு காமென்வெல்த் போட்டியில் தங்கம்,ஆசிய விளையாட்டில் வெண்கலம் ஆகியவற்றை டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா பெற்றிருந்தார், ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பாலின் செயல்பாடும் குறிப்பிடத்தகுந்ததாக இருந்ததால், கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது
அர்ஜூனா விருதுக்கு 29 வீரர், வீராங்கனைகள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தனர். இதில் 27 ேபருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதில், வலுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு, கேல்ரத்னா விருது பெற்ற சாக்்ஸி மாலிக் ஆகிய இருவருக்கும் அர்ஜூனா விருது அறிவிக்கப்படவில்லை.

அர்ஜூனா விருது கிரிக்கெட் பிரிவில் இரு வீரர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா, மகளிர் அணி வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருது ஹாங்கியில் பயிற்சியாளர் செபாஸ்டியன் உள்பட 5 பேருக்கு ரெகுலர் பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் பிரிவில் 8 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தயான் சந்த் விருது 15 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x