Published : 17 Aug 2020 04:37 PM
Last Updated : 17 Aug 2020 04:37 PM

டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற இரவு தோனியின் கண்களில் கண்ணீர்: நெருக்கமான 5 நினவுகளைப் பகிர்ந்த அஸ்வின்

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென், கேப்டன் தோனி ஓய்வு பெற்றதையடுத்து முன்னாள் , இந்நாள் வீரர்கள் புகழாரங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக அஸ்வின் அவருடனான நினைவுகளைப் பற்றி பேசியுள்ளார்.

யூ டியூபில் அவர் கூறியிருப்பதாவது:

லெஜண்ட் எம்.எஸ்.தோனி ஓய்வு அறிவித்துள்ளார், அவருடனான அற்புதமான நினைவுகள் உள்ளன. ஆஸ்திரேலியாவில் 2014-ல் தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து இப்படித்தான் திடீரென ஓய்வு பெற்றார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

அப்போது நானும் தோனியும் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் தோல்வியிலிருந்து காப்பாற்ற சேர்ந்து பேட்டிங் செய்தோம். போட்டி முடிந்தவுடன் நேராக செய்தியாளர்கள் கூட்டத்துக்கு சென்றார் தனக்கேயுரிய பாணியில் டெஸ்ட் ஓய்வை அறிவித்தார்.

மிகவும் உணர்ச்சிகரமான தருணம், நான், இஷாந்த் சர்மா, சுரேஷ் ரெய்னா, தோனியின் அறையில் அன்று மாலை இருந்தது நினைவில் இருக்கிறது. தன் டெஸ்ட் மேட்ச் உடையை அவர் கழற்றவில்லை இரவு முழுதும் அணிந்திருந்தார். அவர் கண்களில் கண்ணீர் தளூம்பியது.

இந்த கிரிக்கெட்டில் அவர் சாதிக்காததே இல்லை. நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்துள்ளார். நாட்டின் மீது அணியின் மீது அளவில்லா பற்று கொண்டவர். இன்றைய சுதந்திர தினத்தில் தன் ஓய்வை அறிவித்துள்ளார். எனவே தோனியுடனான என் சிறந்த தருணத்தைப் பற்றி பதிவு செய்யலாம் என்று கருதுகிறேன்.

நீண்ட காலத்துக்கு முன்பாக தோனியை நான் நெட்பவுலராக இந்தியா-மே.இ.தீவுகள் போட்டியின் போது சேப்பாக்கத்தில் சந்தித்தேன். நானும் அவரும் எடுத்துக் கொண்ட போட்டோ உள்ளது, பிறகு 2008-ல் சிஎஸ்கே ஒப்பந்தம் கிடைத்த போது அவருட நெருக்கமாகப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. நிறைய பேசமாட்டார். முதலில் பார்த்த நீளமான தலைமுடி வைத்திருந்தார், பிறகு அவருடன் நெருங்க நெருங்க அவர் முதிர்ச்சியடைந்த ஒரு கேப்டன் என்பது தெரிந்தது. அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்.

சிஎஸ்கேவில் முதல் 2 ஆண்டுகள் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சாலஞ்சர்ஸ் ட்ராபியில் ஒருவரையொருவர் எதிராகச் சந்தித்தோம், இறுதிப் போட்டியில் அவர் விக்கெட்டை வீழ்த்தினேன். இதுதான் தோனியின் விக்கெட்டை வீழ்த்திய என் நினைவு.

தோனியுடனான ஒரு ஐந்து நினைவுகள் எனக்கு இருக்கிறது.

2010-ல் ஐபிஎல் தொடரில் தரம்சலாவில் போட்டி, இறுதி குரூப் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை சிஎஸ்கே வீழ்த்தியே ஆக வேண்டும். அப்போதுதான் அரையிறுதி செல்ல முடியும். அந்த சீசன் முழுதும் நான் அணியில் இல்லை. மீண்டும் வந்தேன் மிகப்பிரமாதமான சீசன் அமைந்தது. சீசனின் சிறந்த பவுலராகத் திகழ்ந்தேன். ஆனால் எம்.எஸ்.தோனி அன்றைய இரவு இர்பான் பதானுக்கு எதிராக அடித்த ராட்சத சிக்சர்களை மறக்க முடியாது. சிஎஸ்கேவை அரையிறுதிக்கு இட்டு சென்றார். ஐபிஎல் தொடரையும் வென்றோம்.

தோனியுடனான என் 2வது சிறந்த தருணம் சாம்பியன்ஸ் லீக் 2010. இதையும் வென்றால் சிஎஸ்கேவுக்கு அது ஒரு இரட்டை சாம்பியன் பட்டமாகும். இந்தத் தொடரும் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது, நான் அந்தத் தொடரின் சிறந்த பவுலராக திகழ்ந்தேன். ஆனால் தோனி ஒரு முக்கியமான ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்தார். நான் விக்டோரியா புஷ்ரேஜஞ்சர்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரை வீசினேன். அப்போது என்னிடம் தோனி வந்தார். ’நீ உன்னிடம் உள்ள சிறந்த பந்தை இந்த நெருக்கடியில் வீச வேண்டு என்று கருதாதே. உன்னிகம் கேரம் பால் உள்ளது, நிறைய அதைப் பயன்படுத்துகிறாய், மிகச்சிறப்பாகப் பயன்படுத்துகிறாய் அந்தத் திறமையை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும் என்றார் அந்த அறிவுரை இன்னமும் நான் கடைப்பிடிப்பதாக உள்ளது.

தோனியுடனான எனது 3வது நினைவு, இது உலகக்கோப்பை 2011. இந்த தொடர் ஒரு நாடகம் என்பதற்குச் சற்றும் குறைவானதல்ல, இந்திய அணி டை செய்தது, தோற்றது, வென்றது, ஆனாலும் இறுதிப் போட்டி ஒரு பெரிய அங்கமாக அந்த நாடகத்தில் இருந்தது, தோனி முன்னமேயே களமிறங்கினார், அங்கு வருவதை எதிர்கொள்ள புறப்பட்டார். உலகக்கோப்பைகளின் ஒரு தீர்மானகரமான இன்னிங்சை அன்று ஆடினார். அந்த இரவு என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த இரவு.

4வது நினைவு, 2013 சாம்பியன்ஸ் ட்ராபி (50 ஓவர் கிரிக்கெட்), தோனிக்கு என் திறமை மேல் அதிமேல் நம்பிக்கை வைத்திருந்தார். முதல் போட்டியில் நான் விக்கெட் எடுக்கவில்லை. ஜடேஜாவுக்கு அது அருமையான தொடராக இருந்தது. தோனி என்னிடம் கூறினார் ஜட்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார், ஆனால் ஆட்டமும் அப்படித்தான், ஆனால் உனக்கான தருணம் இந்த தொடரில் வரும், இதனை அவர் ஒருமுறை இருமுறை அல்ல 5 முறை கூறினார், இறுதிப் போட்டியின் போது, இறுதி ஓவரில் ‘உன் சிந்தனைப் போக்கு சரிதான். அதனால் தான் நாம் இந்த நிலைக்கு வந்துள்ளோம். நிச்சயம் உன்னால் இது முடியும் என்றார். பந்தை என் கையில் கொடுத்தார்.

கடைசியாக என் 5வது நினைவு, சேப்பாக்க டெஸ்ட் 2013. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட். நான் பங்காற்றியதில் சிறந்த டெஸ்ட் அது. தோனிக்கும் அது மறக்க முடியாத டெஸ்ட், அவர் இரட்டைச் சதம் அடித்தார் (224), அப்போது 13 விக்கெட்டுகளை வீழ்த்தினேன், வெற்றிக்கு பிறகு என்னிடம் வந்த தோனி. மிகவும் விவேகத்துடன் ’நான் இன்று ஆட்ட நாயகன், ஆனால் நீ இந்தத் தொடரை அருமையாகத் தொடங்கியிருக்கிறாய், இது உன் சொந்த மண், உனக்கு தொடர் நாயகன் விருது கிடைக்கும் கீப் கோயிங் அஷ் என்றார். அவரது குரல் ‘கமான் அஷ்’ இது என்னில் ஒலித்துக் கொண்டிருக்கும்.

ஐபிஎல்க்கு முன்னால் ஓய்வு பெற்றிருக்கிறீர்கள் தோனி அது இந்த ஐபிஎல் தொடரில் உங்களை மேலும் அபாயகரமான வீரராகக் கருத வைத்துள்ளது. உங்களுடைய சிறந்த எதிர்காலத்துக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாறு அஸ்வின் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x