Published : 17 Aug 2020 02:35 PM
Last Updated : 17 Aug 2020 02:35 PM

'யாராலும் முறியடிக்க முடியாது; ஒரே ஒரு சாதனைக்காக வரலாற்றில் தோனியின் பெயர் எப்போதும் நிலைத்திருக்கும்': கவுதம் கம்பீர் நம்பிக்கை

கவுதம் கம்பீர், தோனி : கோப்புப்படம்

புதுடெல்லி


ஐசிசி நடத்தும் மூன்று விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் எம்எஸ் தோனி மட்டும்தான். இந்த சாதனை எப்போதும் நிலைத்திருக்கும். இதை யாராலும் முறியடிக்க முடியாது என்று நான் பந்தயம் வைக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கூல் கேப்டன் என அழைக்கப்படும் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை அறிவித்தார். கடந்த 2019-ம் ஆண்டு உலககக் கோப்பைப் போட்டி அரையிறுதி தோல்விக்குப்பின் எந்த விதமான போட்டியிலும் விளையாடாமல் இருந்து வந்த தோனி, திடீரென ஓய்வு அறிவித்தார்.

தோனியின் ஓய்வு அறிவிப்புச் செய்திக்குப்பின் அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து, புகழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒருநிகழ்ச்சியில் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் நேற்று பங்கேற்றார். அப்போது அவரிடம் தோனியின் ஓய்வு, சாதனைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு கம்பீர் கூறுகையில் “ ஐசிசி நடத்தும் மூன்று கோப்பைகளை வென்ற உலகிலேயே ஒரே கேப்டன் தோனி மட்டும்தான். இந்த ஒரு சாதனையைப் பற்றி நீங்கள் எப்போதும் பேசலாம், யாரும் இந்த சாதனையை முறியடிக்கவே முடியாது. அவ்வாறு யாராவது முறியடித்துவிடுவார்கள் என்று நான் நினைக்கக்கூட இல்லை. டி20 உலகக்கோப்பை, ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டும்தான்.

இந்த ஒரு சாதனை கிரிக்கெட் உலகில் நீண்டகாலத்துக்கு நிலைத்து இருக்கப்போகிறது. நான் உங்களிடம் பந்தையம் வைக்கிறேன், தோனியின் இந்த ஒரு சாதனைதான் எப்போதும் யாராலும் எந்த கேப்டனாலும் தகர்க்க முடியாத சாதனையாக இருக்கப்போகிறது.

ஒரு வீரர் ஏராளமான சதங்கள் அடித்துள்ளார், கேட்ச் பிடித்துள்ளார், ரன்கள் சேர்த்துள்ளார் என்ற சாதனையெல்லாம் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இனிமேல் வரும் பல்வேறு இளம் வீரர்கள் அந்த சாதனையை முறியடிப்பார்கள். ரோஹித் சர்மாவின் இரட்டை சதத்தைகூட முறியடிக்கலாம்.

ஆனால், தோனியின் தலைமையில் ஐசிசியின் 3 கோப்பைகளை வென்ற சாதனையை மட்டும் யாராலும் முறியடிக்க முடியாது.இது தோனியின் முறியடிக்க முடியாத சாதனையாக எப்போதும் திகழும்
இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x