Last Updated : 16 Aug, 2020 12:07 PM

 

Published : 16 Aug 2020 12:07 PM
Last Updated : 16 Aug 2020 12:07 PM

செப்டம்பர் 19-ம் தேதி டாஸ் நிகழ்வில் சந்திக்கிறேன் மகி: ரோஹித் சர்மா உருக்கம்

ரோஹித் சர்மா, தோனி : கோப்புப்படம்

புதுடெல்லி

இந்தியக் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் தோனி, அவரை நீலநிற உடையில் இனிமேல் பார்க்க முடியாவிட்டாலும்,மஞ்சள் ஜெர்ஸியில் 2 ஆண்டுகளுக்குப் பார்ப்பேன், செப்டம்பர் 19-ம் தேதி டாஸ் நிகழ்வில் சந்திக்கிறேன் மகி என்று ரோஹித் சர்மா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தானும் வளர்ந்து, தான் சார்ந்திருக்கும் அணியையும், சக வீரர்களையும் வளர்த்து விடுபவர்தான் உண்மையான கேப்டன். அந்த கேப்டன் எனும் வார்த்தைக்கு உரித்தாக இருந்தவர் தோனி என்பத மறுக்க முடியாது. தோனியால் உருவாக்கப்பட்டவர்கள், வார்க்கப்பட்ட வீரர்கள் பலர் உண்டு. இன்றுள்ள இந்தியக் கேப்டன் விராட் கோலியும் தோனியின் வளர்ப்பில் வந்தவர்தான்.

அதில் முக்கியமானவர் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, நடுவரிசையில், 7-வது இடத்தில் இறங்கிய ரோஹித் சர்மாவை கடந்த 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தொடக்க வீரராக களமிறங்க வைத்து அனைவரையும் உற்றுநோக்க வைத்தவர் தோனி. ரோஹித் சர்மாவின் வாழ்க்கையில் ஏணியாக அமைந்தவர் தோனி என்பதுதான் நிதர்சனம்.

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து முன்னாள் வீரர்களும், பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து புகழாரம் சூட்டி வருகின்றனர்.

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி குறித்தும், சுரேஷ் ரெய்னாகுறித்தும் உருக்கமாகக் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய மனிதர் மகி. கிரிக்கெட்டைச் சுற்றியும், கிரிக்கெட்டுக்குள் அவரின் தாக்கம் மிகப்பெரியது. ஒரு அணியை எவ்வாறு கட்டமைப்பது, உருவாக்குவது என்பதில் தீர்க்கமான நோக்கத்தை கொண்ட மாஸ்டர் தோனி.

உண்மையில் நாங்கள் தோனியை நீலநிற ஜெர்ஸியில் இழக்கிறோம், ஆனால், மஞ்சள் நிற ஜெர்ஸியில் அவரை தொடர்ந்து பார்ப்போம் என நம்புகிறேன். உங்களை செப்டம்பர் 19-ம் தேதி டாஸ் நிகழ்வில் சந்திக்கிறேன் மகி. உலகக்கோப்பையை பெற்றுக்கொடுத்த கேப்டன், அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டியில் விளையாடுவார் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் டி20 தொடரின் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது இடம் பெற்ற சிஎஸ்கே அணியும் செப்டம்பர் 19-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் முதலாவது ஆட்டத்தில் மோதுகின்றன. அதைக் குறிப்பிட்டுத்தான் டாஸ் நிகழ்வில் சந்திப்போம் என்று ரோஹித் சர்மா தோனியைக் குறிப்பிட்டுள்ளார்.

சுரேஷ் ரெய்னா குறித்து ரோஹித் சர்மா குறிப்பிடுகையில் “ எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது, ஆனால், எப்போது நீ வருத்தப்படுவாய் என்பதை என்னால் உணர்ந்து கணிக்க முடிந்தது. நல்ல எதிர்காலம் அமையட்டும் சகோதரரே, சிறந்த ஓய்வாக அமையட்டும், நாம் இருவரும் அணியில் விளையாடிய காலத்தை நினைவு கூர்கிறேன் சிறந்த எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x