

இன்றைய கிரிக்கெட் உலகில், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகிய நால்வர் கூட்டணிதான் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற கருத்துலகில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் பெயரையும் சேர்த்துள்ளார் மே.இ.தீவுகளின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப்.
இயன் பிஷப் சச்சின் டெண்டுல்கருக்கு இவரது ஆரம்ப காலத்திலேயே வீசியிருக்கிறார், இயன் பிஷப் ஒரு டெரர் பவுலர், ஆனால் சச்சினோ பயமென்றால் என்னவென்று தெரியாத இளங்காளை. உலக லெவனுக்கும் மே.இ.தீவுகளுக்கும் இடையே லார்ட்ஸில் நடைபெற்ற போட்டியில் இயன் பிஷப்பை கொஞ்சம் மேலேறி வந்து சிக்ஸ் அடித்தார் சச்சின்.
அப்பொதெல்லாம் இயன் பிஷப்பை இப்படி ஆடுவது கடினம் என்பதோடு மண்டைக்கு ஆபத்தான விஷயம்.
இந்நிலையில் முன்னாள் ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் மபமெல்லோ மபாங்வாவுடன் பேசிய இயன் பிஷப் கூறியதாவது:
அதாவது நேராக ஆடுவது என்ற ஒரு விஷயத்தில், நான் சச்சிண் டெண்டுல்கருக்கு பவுலிங் செய்தவன் என்ற முறையில், விராட் கோலி, பாபர் ஆஸமை சச்சினுடன் ஒப்பிடுகிறேன், நான் பவுலிங் வீசியதில் சச்சின் டெண்டுல்கர்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் கருதுகிறேன்.
சச்சின் எப்பவும் நேராக ஆடுவார், நேர் கோட்டில் ஆடுவார், அதுதான் எனக்கு விராட் கோலியையும் பாபர் ஆஸமையும் பார்க்கும் போதும் தோன்றுகிறது, என்றார்.
மேலும் ஜஸ்பிரித் பும்ரா பற்றி கூறும்போது, “இந்தத் தலைமுறையின் திறமை என்றால் அது பும்ரா, அனைத்து வடிவங்களுக்கும் ஏற்ற்றார் போல் அவர் தன்னை மாற்றிக் கொள்வது அற்புதமான ஒரு திறமை. அதே போல் ரபாடாவும், தற்போது வேகப்பந்து வீச்சின் மறுமலர்ச்சிக் காலம்” என்றார்.