Published : 10 Aug 2020 07:57 AM
Last Updated : 10 Aug 2020 07:57 AM

நோட்டீஸ் இல்லாமல் திடீரென்று பணியிலிருந்து நீக்கம்: 17 முன்னாள் பிசிசிஐ ஸ்கோரர்கள் வேதனை

கடந்த ஆண்டு பிசிசிஐ அதன் 17 ஸ்கோரர்களை எந்த வித நோட்டீஸுமின்றி, ஓய்வுக்குரிய பயன்கள் எதுவும் இன்றி வெளியே அனுப்பியது, இவர்களுக்கான எந்த ஒரு நிதிப்பயன்களையும் இதுவரை அளிக்கவில்லை. இவர்கள் தற்போது வேதனையுடன் தங்கள் மாநில கிரிக்கெட் வாரியத்தை அணுகியுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் வயது 60 ஆகிறது. ஆகஸ்ட் 2019 உடன் இவர்களது சேவைக்காலம் முடிவடைகிறது, ஆனால் இவர்களுக்கு எந்த வித நோட்டீசும் அளிக்காமல் திடீரென வேலையை விட்டு அனுப்பப்பட்டனர். ஓய்வுகால பயன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

இவர்கள் அனைவரும் பிசிசிஐ கிரிக்கெட் போட்டிகளில் 1980-ம் ஆண்டு முதல் ஸ்கோர் குறிப்பவர்கள்.

இது தொடர்பாக பிசிசிஐ ஸ்கோரராரன 65 வயது தபஷ் ராய் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்குக் கூறும்போது, “எங்களை வெளியே துரத்தி விட்டனர், இதை இப்படித்தான் கூற வேண்டியுள்ளது. இத்தனையாண்டுகால சேவை மற்றும் தியாகத்துக்குக் கிடைத்த பரிசு இதுதான்” என்று வேதனையுடன் புலம்பியுள்ளார்.

அதே போல் நாகராஜ் என்ற 68 வயது ஸ்கோரர், இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் இவரும் எந்த வித நோட்டீஸும் இல்லாமல் வேலையை விட்டு அகற்றப்பட்டதாக புகார் எழுப்பியுள்ளார்.

அனைத்து பிசிசிஐ பதவிகளுக்கும் நீதிபதி லோதா கமிட்டி 60 வயதைய உச்ச வரம்பாக நிர்ணயித்துள்ளது என்றும் ஆகவேஒரு தனிமனிதனாக இது வேதனை அளிக்கிறது என்றாலும் ஒன்றும் செய்ய முடியாது, பிசிசிஐ விதிமுறை அப்படி என்று இன்னொரு பிசிசிஐ அதிகாரி சேனலுக்கு தெரிவித்தார்.

ஸ்கோரர்கள் ஒப்பந்த ஊழியர்கள் அல்ல. இவர்கள் ஃப்ரீலான்சர்கள் போல்தான் எனவே பயன்கள் என்பது கடினமே என்று பிசிசிஐ தரப்பு கூறுகிறது.

இந்நிலையில் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்தவும், கட்டாயமாக ஓய்வு அளிக்கப்பட்ட 17 ஸ்கோரர்கள் 2019-20-ம் ஆண்டு முடியும் வரை பணியாற்றவும், மாதாந்திர நிரந்தர ஓய்வூதியம் அல்லது ஒரேயொரு முறை ஓய்வு பயன் அளித்தல் என்று ஏதாவது ஒரு பயனை அறிவிக்கவுக்கும் இந்த ஸ்கோரர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

பிசிசிஐ-யில் சுமார் 150 ஸ்கோரர்கள் இருப்பதாகவும் அவர்கள் பெரும்பாலும் தங்கள் வேலையை விட்டு வந்து ஸ்கோரிங் பணியில் இருப்பதாகவும் அவர்களுக்குக் கிடைக்கும் பணமும் சொற்பம்தான் என்றும் கவுதம் ராய் என்ற ஸ்கோரர் தெரிவித்துள்ளார்.

1980 முதல் விருப்பத்துடன் பணியாற்றும் இவர்களுக்கு முன்பெல்லாம் போட்டி ஒன்றுக்கு ரூ.50 அல்லது ரூ.100 கொடுக்கப்படும். ஆனால் இவர்க பெரும்பாலும் எதுவும் எதிர்பார்க்காமல் ஆட்டத்தின் மீதான பற்றுதலில் இந்தப் பணியைச் செய்வதாக கவுதம் ராய் தெரிவித்தார்.

ஆனால் 1997ம் ஆண்டு ஜெயந்த் லீலே பிசிசிஐ செயலராக இருந்த போது ஸ்கோரர்களையும் ஆட்ட அதிகாரிகள் என்ற பட்டியலில் சேர்த்து மேட்ச் நாள் ஒன்றுக்கு ரூ.500 என்று அதிகரித்தார். 2018-19-ல் ரூ.10,000 என்பதாக இது உயர்ந்தது என்று கவுதம் ராய் தெரிவித்தார்.

ஆனால் பெங்கால் ஸ்கோரர் கவுஷிக் சாஹா என்பவர் மாரடைப்பால் காலமானார், அவருக்கு பிசிசிஐ எந்த ஒரு உதவியும் செய்யவில்லை. ரமேஷ் பராப் என்ற மும்பை ஸ்கோரருக்கு கரோனா வைரஸ் பாதித்து கிட்டத்தட்ட 21 நாட்கள் மருத்துவமனையில் இருந்ததாகவும் அவருக்கும் பிசிசிஐ எந்த உதவியையும் செய்யவில்லை என்றும் ஸ்கோரர்கள் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x