இந்திய அணி வீரர்களுக்குச் சேர வேண்டிய ஒப்பந்தத் தொகையை பிசிசிஐ இன்னும் அளிக்கவில்லையா?
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ கடந்த 10 மாதங்களாக இந்திய அணி வீரர்களுக்கு ஒப்பந்தத் தொகைத் தவணையை அளிக்கவில்லை என்று ஊடகங்கள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுவாக ஒப்பந்தத் தொகை 4 தவணைகளாக வீரர்களுக்கு அளிக்கப்படுவது வழக்கம்.
பிசிசிஐ உயர்மட்ட வீரர்கள் ஒப்பந்தத்தில் இருக்கும் 27 வீரர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் காலாண்டு தவணையில் முதல் தவணை சம்பளம் கூட கொடுக்கப்படவில்லை என்று ஆங்கில ஊடகம் ஒன்று பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
அதே போல் வீரர்களுக்கு 2019 டிசம்பர் முதல் விளையாடிய 2 டெஸ்ட் போட்டிகள், 8 டி20 போட்டிகள், 9 ஒருநாள் போட்டிகளுக்கான சம்பளமும் வழங்கப்படவில்லை என்று அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
ஒப்பந்தத்தில் ஏ பிளஸ் பிரிவில் உள்ள விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி கிடைக்கும். ஏ,பி, சி கிரேடில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு முறையே 5 கோடி, ரூ,3கோடி, ரூ.1 கோடி கிடைக்கும்.
பொதுவாக 4 தவணைகளாக ஒப்பந்தத் தொகை அளிக்கப்படும் என்றும் ஆனால் முதல் தவணையே இன்னும் வீரர்களுக்கு அளிக்கப்படவில்லை என்றும் ஆங்கில ஊடகம் ஒன்றின் செய்தி தெரிவிக்கிறது.
