Published : 02 Aug 2020 11:24 AM
Last Updated : 02 Aug 2020 11:24 AM

91/6-லிருந்து 212 ரன்கள் எடுத்த பிறகு இங்கி.யை அலற விட்ட அயர்லாந்து: வில்லே, பில்லிங்ஸ் ஆட்டத்தில் தொடரை வென்றது இங்கிலாந்து

அயர்லாந்து, இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது, இதில் இங்கிலாந்து நேற்றைய போட்டியில் வென்று தொடரை 2-0 என்று கைப்பற்றியது. பேர்ஸ்டோ காட்டடி தர்பாரில் 41 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.

சவுத்தாம்ப்டனில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து கேப்டன் பால்பர்னி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். ஆனால் அந்த அணி 78/5 பிறகு 91/6 என்று சரிந்தது, ஆனால் மீண்டும் அறிமுக வீரர் கேம்பர் (68) மீண்டுமொரு அற்புதமான அரைசதம் எடுக்க சிமிசிங் (25), மெக்பர்னி (24) ஆகியோர் பங்களிப்புடன் ஸ்கோரை 50 ஓவர்களில் 212/9 என்று உயர்த்தினார்கள்.

ஆனால் உலக சாம்பியன்களான அதிரடி இங்கிலாந்து வரிசைக்கு இந்த ஸ்கோர் போதுமா? அதுவும் ஜேசன் ராய், பேர்ஸ்டோ போன்ற அதிரடி வீரர்களுக்குப் போதுமா. ஆனால் ராய் நேற்று டக் அவுட் ஆகி வெளியேறினார், ஆனால் பேர்ஸ்டோ 41 பந்துகளில் 14 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 82 ரன்களெடுத்து 16வது ஓவரில் வெளியேறினார். ஆனால் டேவிட் வில்லே (47), சாம் பில்லிங்ஸ் (46) இங்கிலாந்தை வெற்றிக்கு இட்டுச் செல்ல, 32.3 ஒவர்களில் 216/6 என்று இங்கிலாந்து வென்றது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 137/6 என்று சரியும் அபாயத்தில் இருந்தது, ஆனால் மேலும் விக்கெட்டுகள் சரியாமல் டேவிட் வில்லே, சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்தைக் காப்பாற்றினர்.

ஜானி பேர்ஸ்டோ 21 பந்துகளில் அரைசதம் கண்டு அதிவேக அரைசத இங்கிலாந்து சாதனையைச் சமன் செய்தார்.

இங்கிலாந்து அணியில் ஜேசன் ராய், இயான் மோர்கன், மொயின் அலி மூவரும் டக் அவுட் ஆகினர். அயர்லாந்தின் 20 வயது இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் என்பவர் மிகப்பிரமாதமாக வீசி ஒரே ஒவரில் இயான் மோர்கனையும் மொயின் அலியையும் டக் அவுட் செய்தார், இவர்தான் முன்னதாக அதிரடி பேர்ஸ்டோவையும் வெளியேற்றினார்.

முதலில் பேட் செய்த அயர்லாந்து அணிக்கு மீண்டும் சேதத்தை ஏற்படுத்தினார் டேவிட் வில்லே. 3வது ஓவரில் டெலானியை பிளம்ப் எல்.பி.ஆக்கிய இவர், பால் ஸ்டர்லிங் (15) விக்கெட்டை பேக்வர்ட் பாயிண்ட் கேட்ச் மூலம் கைப்பற்ற அயர்லாந்து 15/2 என்று ஆனது. கேப்டன் பால்பர்னி கட் ஷாட் ஆடுவதை தவிர்க்கும் முயற்சியில் 15 ரன்களில் ஜேம்ஸ் வின்சிடம் வீழ்ந்தார்.

ஆதில் ரஷீத் வந்தார் கெவின் ஓ பிரையன் விக்கெட்டை அருமையான கூக்ளியில் பவுல்டு ஆக்கி வீழ்த்தினார். 28 ரன்களுக்கு நன்றாக ஆடிய் டெக்டர், 21 ரன்களுக்கு நம்பிக்கை அளித்த டக்கர் ஆகியோரையும் ரஷீத் காலி செய்தார். 150 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டிகளில் கைப்பற்றினார் ரஷீத்.

முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் எடுத்து அயர்லாந்தை மீட்ட கர்டிஸ் கேம்ஃபர் மீண்டும் மிகச்சிறப்பாக ஆடி 68 ரன்களைச் சேர்த்தார். இவர் சிமி சிங்குடன் சேர்ந்து 60 ரன்களையும் மெக்பர்னியுடன் சேர்ந்து 56 ரன்களையும் கூட்டணி அமைக்க அயர்லாந்து 91/6லிருந்து 212 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷீத் 3 விக்கெட்டுகளை வீழ்த்த வில்லே, மஹ்மூத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இங்கிலாந்து விரட்டலைத் தொடங்கிய போது முதல் ஓவரிலேயே கிரெய்க் யங்கிடம் ஜேசன் ராய் டக் அவுட் ஆனார். ஆனால் பேர்ஸ்டோவை ஒன்றும் செய்ய முடியவில்லை, அடுத்த 2 ஒவர்களில்ல் 5 பவுண்டரிகளை விளாசினார். பிறகு மெக்பர்னியை லாங் ஆஃபில் ஒரே தூக்குத் தூக்கி 21 பந்துகளில் அரைசதம் கண்டு அதிவேக அரைசத மோர்கன் சாதனையைச் சமன் செய்தார்.

68 ரன்களை பேட்டிங்கில் எடுத்த ஆல்ரவுண்டர் கர்டிஸ் கேம்ஃபர் பவுலிங்கில் வின்ஸ், டாம் பேண்ட்டன் ஆகியோரை வெளியேற்றினார். பேர்ஸ்டோ ஒருவரை வீழ்த்தினால் போதும் என்ற நிலையில்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் லிட்டில் பந்தில் 82 ரன்களில் எட்ஜ் ஆகி வெளியேறினார்.

பிறகு மோர்கனை கவர் திசை கேட்சுக்கும், மொயின் அலியை பவுன்சரிலும் வெளியேற்றினார் லிட்டில். இங்கிலாந்து 137/6 என்று சரிவு கண்டது. பேர்ஸ்டோ 3000 ரன்களைக் கடந்தார்.

அயர்லாந்து கேப்டன் பால்பர்னி களவியூகத்தில் நெருக்கடி அளித்தார். இதில் நிதானம் கடைப்பிடித்தனர் சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லே. பிறகு லிட்டில் பவுன்சரை ஹூக் சிக்ஸ் அடித்தார் வில்லே, பிறகு கேம்ஃபர் ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகள் என்று அடிக்க அயர்லாந்து வெற்றி பெறும் முயற்சி தோல்வி அடைந்தது. இங்கிலாந்து தொடரை 2-0 என்று கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக பேர்ஸ்டோ தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x