Published : 01 Aug 2020 04:47 PM
Last Updated : 01 Aug 2020 04:47 PM

சிட்னி டெஸ்ட் மோசடிகளுக்குப் பிறகு பதிலடி கொடுத்து வெற்றி பெறவே தொடர்ந்து ஆடினோம்: அனில் கும்ப்ளே மனம் திறப்பு

2008-ல் அனில் கும்ப்ளே தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் ஆடச் சென்ற போது சிட்னி டெஸ்ட் சர்ச்சைகளுக்குப் பிறகு தொடரை முறித்து பாதியிலேயே திரும்புவது ஏற்றுக் கொள்ளக் கூடிய தெரிவாக இருந்தது, ஆனாலும் தொடர்ந்து ஆடி ஒரு முன்னுதாரணமாகத் திகழ விரும்பினோம் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரூ சைமண்ட்சுகு 9 அவுட்கள் தரப்படவில்லை, கடைசி நாளில் இந்தியாவுக்கு எதிராக ராகுல் திராவிட், கங்குலி உள்ளிட்டோருக்கு கொடுத்த 4-5 தீர்ப்புகளால் இந்தியா தோல்வியடைந்தது, ரிக்கி பாண்டிங் அவுட்டெல்லாம் கொடுத்தார் என்றால் மோசடியை நாம் எண்ணிப்பார்க்கலாம்.

மேலும் ஹர்பஜன் சிங் ஏதோ சைமண்ட்ஸை நிறவெறி வசைபாடி விட்டார் என்று நடுவர் மோசடியால் பெற்ற வெற்றியை திசைத்திருப்ப ஆஸ்திரேலியா புதிய சர்ச்சையைக் கிளப்பி போலியாக புலம்பித்தள்ளியது. ஹர்பஜனுக்கு 3 போட்டிகள் ஆடத் தடை விதிக்கப்பட்டது, ஆனால் இந்தியா மேல்முறையீடு செய்ய 50% அபராதத்துடன் ஹர்பஜன் தப்பினார்.

இந்தியா முதல் டெஸ்ட் மெல்போர்னில் நடந்த போது 337 ரன்களில் தோல்வி தழுவினர். 2வது டெஸ்டில் சிட்னியில் கடும் நடுவர் மோசடிகளில் இந்தியா 122 ரன்களில் தோல்வி தழுவியது, ட்ரா ஆகியிருக்க வேண்டிய மேட்ச் மோசடியினால் இந்தியா தொற்றது, கேப்டன் கும்ப்ளே ஒரு முனையில் 45 ரன்களுடன் போராளியாக நின்றார். அடுத்த பெர்த் டெஸ்ட் போட்டியில் வென்றது இந்திய அணி, சேவாக் மீண்டும் வந்தார். அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா போராடி ட்ரா செய்தனர். சேவாக் 155 ரன்களை பிரமாதமாக ஆடி எடுத்தார். இந்தத் தொடருக்கு சேவாகை விட்டுச் சென்றனர், பிறகு ஜாஃபர் தோல்வி என்றவுடன் இயன் சாப்பல், வேர் இஸ் விரூ? என்று கேட்டார். உடனே தேர்வு செய்தனர்.

அந்த டெஸ்ட் குறித்து அஸ்வினுடன் யூ டியூப் சேனலில் பேசிய கும்ப்ளே, “ஒரு கேப்டனாக களத்தில் முடிவெடுக்க வேண்டும் என்பதை பார்த்திருப்பீர்கள், ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் களத்துக்கு வெளியே நான் சில விஷயங்களை எதிர்கொள்ள நேரிட்டது. கிரிக்கெட் ஆட்டத்தின் பொதுவான நலனுக்காக ஒரு முடிவை எடுக்க நேரிட்டது.

ஒரு அணியாக இணைந்திருக்க வேண்டிய கட்டாயம், ஆனால் தொடரை முறித்துக் கொண்டு நாடு திரும்பும் பேச்சுக்கள் உரத்து எழுந்தன. வந்திருந்தால் கூட மக்கள் என்ன கூறுவார்கள், இந்திய அணிக்கு தவறிழைக்கப்பட்டது, வந்துவிட்டார்கள் என்று ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரு கேப்டனாக சிந்தித்தேன், அணியாக யோசித்தேன் , அங்கு சென்று தொடரைக் கைப்பற்றவே ஆடினோம், துரதிர்ஷ்டவசமாக 2 டெஸ்ட் போட்டிகள் எங்கள் விருப்பத்துக்கேற்ப செல்லவில்லை. எனவே அடுத்த 2 டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை சமன் செய்து பதிலடி கொடுக்கவே தொடர்ந்து ஆடினோம். இதுதான் ரசிகர்களுக்கு நாம் கொடுக்கும் சிறந்த செய்தியாக இருக்கும் என்று முடிவெடுத்தோம்.” என்றார் கும்ப்ளே.

(-பிடிஐ தகவல்களுடன்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x