Published : 01 Aug 2020 02:16 PM
Last Updated : 01 Aug 2020 02:16 PM

என் கருத்துக்கள் தூய்மையான இடத்திலிருந்து வருகிறது....தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்...வர்ணனைக் குழுவில் மீண்டும் சேர்த்துக் கொள்ள கங்குலிக்கு மஞ்சுரேக்கர் கடிதம்

பிசிசிஐ வர்ணனைக் குழுவிலிருந்து சஞ்சய் மஞ்சுரேக்கர் நீக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் தான் மன்னிப்புக் கேட்கவும் தயார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் பிற நிர்வாக உறுப்பினர்களுக்கு சஞ்சய் மஞ்சுரேக்கர் கடிதம் எழுதியுள்ளார்.

மன்னிப்புக் கேட்பதில் மகிழ்ச்சியடைகிறேன், என்னை நீக்கியது தன்னம்பிக்கையையே ஆட்டம் காணச் செய்துள்ளது. பெரிய அடியாகிப் போனது என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கடிதத்தில் கூறியிருப்பதாக ஆங்கில நாளேடு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் வர்ணனைக்குழுவிலிருந்து நீக்கப்பட்டதற்கு ‘ஒரு வர்ணனையாளராக சில வீரரகளுக்கும் எனக்கு பிரச்சினை உள்ளது’ என்று மஞ்சுரேக்கர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தன்னை வர்ணனையாளராக மீண்டும் சேர்க்க வேண்டும், தன்னால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்கத் தயார் என்று மஞ்சுரேக்கர் தன் இன்னொரு கடிதத்திலும் கூறியிருக்கிறார்.

பிசிசிஐ விதிமுறைகளுக்கு வர்ணனையாளராக கட்டுப்படுகிறேன் என்று உறுதியையும் மஞ்சுரேக்கர் அளித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரவீந்திர ஜடேஜாவை ‘துண்டு துணுக்கு வீரர்’ அவர் அணியில் இருப்பது அவசியமானதல்ல என்று மஞ்சுரேக்கர் தெரிவித்திருந்தார். இது பெரிய சர்ச்சையாகி, ஜடேஜாவும் தன் பங்குக்கு மஞ்சுரேக்கருக்கு பதிலடி கொடுத்தார்.

இதோடு மட்டுமல்லாமல் வர்ணனையில் அணித்தேர்வுக் கொள்கையை விமர்சித்ததோடு, இந்திய சூப்பர்ஸ்டார் வீரர்களின் ஆட்டத்தை விமர்சித்தார், நம் ஆட்களுக்கு விமர்சனம் என்றாலே எட்டிக்காய், இதனால் பிசிசிஐக்கு நெருக்கடி கொடுத்து அவரை வர்ணனையிலிருந்து விலக்க நெருக்கடி அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக வாரிய நிர்வாகிகளுக்கு மஞ்சுரேக்கர் அனுப்பிய மெயிலில், சில வீரர்களை ரசிகர்கள் வழிபடுகின்றனர், எனவே நாம் அந்த ஆளுமை நிறைந்த வீரர்களை புகழவில்லை எனில் நாம் அவர்களை வெறுப்பதாக ரசிகர்கள் நினைக்கின்றனர். என் விமர்சனங்கள் தூய்மையான இடத்திலிருந்து வருபவை. இதனை நான் புனிதமாகக் கருதுகிறேன். கிரிக்கெட்டைத்தான் நாம் பேசுகிறோம் யாருக்கும் தனிப்பட்ட முறையில் எதிராக அல்ல. எனக்கும் என் தந்தைக்கும் கிரிக்கெட் நிறைய அளித்துள்ளது.
இந்நிலையில் வர்ணனைக்குழுவிலிருந்து விலக்கியிருப்பது என்னை பெரிதும் காயப்படுத்துகிறது, இது எனக்கு பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.

ஆகவே எந்தக் காரணத்துக்காக என்னை விலக்கினாலும் நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருக்கிறேன்.

ஜடேஜா விவகாரத்தைப் பொறுத்தவரை நான் அவரைப் பற்றி என் ட்விட்டர் பக்கத்திலோ, வர்ணனையிலோ அந்தக் கருத்தைக் கூறவில்லை ஒரு நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறினேன், அதன் பிறகு நானும் ஜடேஜாவும் பேசி பிரச்சினைக்கு சுமுகமாகத் த்தீர்வு கண்டு விட்டோம். இருப்பினும் யார் மனமாவது புண்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்கத் தயார், என்று மஞ்சுரேக்கர் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x