Published : 30 Jul 2020 04:13 PM
Last Updated : 30 Jul 2020 04:13 PM

விரேந்திர சேவாக் போல் ஆடுங்கள் : சச்சினிடம் தான் அடிக்கடி கூறியதாக கபில் தேவ் மனம்திறப்பு

டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எந்த கிரிக்கெட்டாக இருந்தாலும் சேவாகின் அணுகுமுறை மனத்தடை இல்லாத ஒரு அணுகுமுறை, ‘பந்தைப் பார் அடி’ என்பதுதான் அவரது எளிமையான அணுகுமுறை ஆனால் எளிமை எப்போதும் கடினமே.

டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முல்டானில் அடித்த முச்சதமாகட்டும் சென்னையில் தென் ஆப்பிரிக்காவின் பவுலர்களை பிரித்தெடுத்து சாத்திய அதிவேக உலக சாதனை முச்சதமாகட்டும் சேவாகின் ஆட்டம் சதத்துக்குப் பிறகே கட்டுப்படுத்த முடியாத வேகமும் மெருகும் அதிகம் கொண்டதாக இருந்துள்ளது.

மாறாக சச்சின் டெண்டுல்கருக்கு அணியில் அழுத்தம் அதிகம் அவர் வந்த போதும் அதன் பிறகும் கூட திராவிட், கங்குலி, லஷ்மண் வந்து அணியில் செட்டில் ஆவதற்கு முன்பாக சச்சினை மட்டுமே அணி நம்பியிருந்தது. 1999 ஆஸி. தொடரில் அவர் கேப்டன்சியில் இதை நாம் பார்த்திருக்கிறோம் அவர் ஆட்டமிழந்தால் இந்திய அணி அவ்வளவுதான். இதைத்தான் சென்னையில் பாகிஸ்தானுடன் தோற்ற அந்த ‘காவிய இன்னிங்ஸ்’ ஆட்டத்திலும் பார்த்தோம். தனக்குத்தானே அழுத்தம் ஏற்றிக் கொள்வார். ஆனால் சேவாக் அப்படியல்ல தடையற்ற மனம், சிக்கல் இல்லாத ஆட்ட முறை.

இந்நிலையில் யூடியூப் சேனலில் டபிள்யு.வி.ராமனுடன் உரையாடிய கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் பற்றி குறிபிடுகையில், “சச்சின் டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்பின்னர்களின் ஒவ்வொரு ஓவரிலுமே சிக்ஸர், பவுண்டரி விளாசும் திறமை உடையவர் இரட்டைச் சதம் அதிகம் அடிக்கவில்லை, முச்சதம் அடிக்கவேயில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.

சச்சின் மும்பை கிரிக்கெட் மனநிலையில் சிக்கிக் கொண்டார். மும்பை மனநிலை என்னவெனில் 100 ரன்கள் அடித்தவுடன், புதிய கார்டு எடுத்துக் கொண்டு மீண்டும் 0-விலிருந்து தொடங்க வேண்டும் என்பது மும்பை மனநிலை.

அங்குதான் சச்சினுக்கு நான் கூறுவேன், நீ ஒரு கருணையற்ற ஆட்டக்காரன், விரேந்திர சேவாக் போல் ஆடு என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு, அதே போல்தான் சேவாகிடம் சச்சின் போல் இரு என்று கூறுவேன். ஏனெனில் சேவாகிடம் எத்தனை ஷாட்கள் கைவசம் உள்ளது. அரைமணி நேரம் நின்றால் பிறகு உன் ராஜ்ஜியம் என்பேன்.

சச்சினிடம் கூறும்போது விரேந்திர சேவாகைப் பார் என்பேன் சதம் எடுத்த பிறகு சேவாக் ஒவ்வொரு ஓவரிலும் 2 பவுண்டரிகள் அடிப்பேன் என்பது போல்தான் ஆடுவார். அடுத்த 20 ஓவர்களில் சேவாக் இரட்டைச் சதத்துக்கு அருகில் இருப்பார்.

ஆனால் சதத்துக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் சிங்கிள் எடுத்து ரன்னர் முனைக்குச் செல்வார். ஆனால் எதிரணி பவுலர்கள் இவரைக் கண்டு பயந்து கொண்டிருப்பார்கள். எப்படி இவரை வீழ்த்தப் போகிறோம் என்று கவலைப்படுவார்கள்.

ஆனால் சேவாக் கிரீசில் இருந்தால் அவரை ரன் எடுக்க விடாமல் அவுட் ஆக்கவே பவுலர்கள் விரும்புவார்கள் அல்லது ஸ்ட்ரைக்கிலிருந்து சேவாகை விலகியிருக்குமாறு செய்வார்கள்.

நான் ஒப்பிடவில்லை, சச்சினுடைய திறமை ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது, அவர் திறமைக்கு குறைந்தது 10 இரட்டைச் சதம், 5 முச்சதங்களை அடித்திருக்க வேண்டும்.” என்றார் கபில்தேவ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x