Published : 27 Jul 2020 07:49 PM
Last Updated : 27 Jul 2020 07:49 PM

பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா பதவிக் காலம் முடிந்தது: மீண்டும் தொடர முடியுமா?

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா: கோப்புப் படம்

புதுடெல்லி 

பிசிசிஐ தலைவர் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர்களுக்குப் பதவி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதா அல்லது பதவியிலிருந்து விலகுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு கடந்த மாதமே பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில் அவர் தொடர்ந்து பிசிசிஐ, ஐபிஎல் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு இன்றுடன் பதவிக்காலம் முடிகிறது. இருவருக்கும் பதவிக்காலம் நீட்டிக்கப்படாத சூழலில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

ஏற்கெனவே பிசிசிஐ பொதுமேலாளர் சாபா கரீம், தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் ஜோரி ஆகியோர் தங்கள் பதவிக்காலம் முடிந்து விலகிய நிலையில் இவர்கள் இருவரும் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

பிசிசிஐ அமைப்பைச் சீரமைக்க லோதா கமிட்டி தலைமையிலான குழு அளித்த பெரும்பாலான பரிந்துரைகளை உச்ச நீதிமன்றம் அமல்படுத்தியுள்ளது. அதில் முக்கியமானது, மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பிசிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தவர்கள், அடுத்து 3 ஆண்டுகள் இடைவெளி விட்டுதான் மீண்டும் பதவிக்கு வர முடியும்.

கடந்த அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய் ஷாவும் பதவி ஏற்றனர். அந்த வகையில் பிசிசிஐ செயலாளராக இருக்கும் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் குஜராத் கிரிக்கெட் அமைப்பில் ஏற்கெனவே 5 ஆண்டுகள் பதவி வகித்துவிட்டார். கடந்த ஆண்டுதான் பிசிசிஐ செயலாளராகப் பதவி ஏற்றாலும் 10 மாதங்கள் மட்டுமே பதவியில் இருக்க முடியும். அந்த வகையில் அவரின் பதவிக் காலம் மே 7-ம் தேதியுடன் முடிவடைந்தது.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தில் கங்கு 5 ஆண்டுகள் பதவி வகித்து விட்டதால், பிசிசிஐ தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபின் 10 மாதங்கள் மட்டுமே அதில் இருக்க முடியும். அந்த வகையில் கங்குலியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூலை 27-ந்தேதி) முடிவடைகிறது.

இருவரும் இனிமேல் மூன்று ஆண்டுகளுக்கு பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கம் தொடர்பாக எந்தப் பதவியிலும் இருக்க முடியாது. 3 ஆண்டுகளுக்குப் பின்புதான் பதவி வகிக்க முடியும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிசிசிஐ பொதுக்கூட்டத்தில் இரு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, கங்குலி, ஜெய் ஷா இருவரும் தங்களின் 3 ஆண்டுகள் பதவியை நிறைவு செய்ய வேண்டும். 2024-ம் ஆண்டுவரை பதவியில் தொடர வேண்டும். இருவருக்கும் அதிகமான அதிகாரங்கள் அளித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டடது. இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

தற்போது கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் சூழலில் தேர்தல் நடத்தி பிசிசிஐ-க்குத் தகுதி வாய்ந்த புதிய தலைவரை நியமிப்பது இப்போதைக்கு இயலாத காரியம்.

மேலும் தலைவர், செயலாளர் பதவியை அதிகபட்சமாக 45 நாட்கள் வரை மட்டுமே காலியாக வைத்திருக்க இருக்க முடியும். அதற்குள் புதிய தலைவரை, செயலாளரை நியமிக்க வேண்டும் என பிசிசிஐ விதிமுறையில் இருக்கிறது.

அடுத்த மாதம் ஐபிஎல் டி20 தொடர், இந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர் போன்றவை தொடர்ந்து நடக்க இருக்கும் சூழலில் பிசிசிஐ தலைவர், செயலாளர் இல்லாமல் செயல்படுவது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தும். உறுதியான முடிவு எடுக்க முடியாத சூழல் ஏற்படும். இதற்கு பிசிசிஐ என்ன செய்யப்போகிறது, இருவருக்கும் பதவி நீட்டிப்புக் கோரப்போகிறதா அல்லது புதிய தலைவர், செயலாளரை நியமிக்கப்போகிறதா என்பதுதான் கேள்வியாகும்.

பிசிசிஐ விதிகள் குறித்து அறிந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில், “பிசிசிஐ விதிப்படி ஒருவர் 6 ஆண்டுகள் தொடர்ந்து மாநில கிரிக்கெட் சங்கம், பிசிசிஐ அமைப்பில் பதவியில் இருந்துவிட்டால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்தப் பதவிக்கும் வரக்கூடாது.

இடைவெளி கொடுக்க வேண்டும். அந்தவகையில் கங்குலி, ஜெய் ஷா பதவிக்காலம் முடிந்துவிட்டது. இருவருக்கும் விதிமுறைப்படி பதவிக்காலம் முடிந்துவிட்டு இனிமேல் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை.

இருவரின் பதவியை நீட்டிக்கும் வாய்ப்பு உச்ச நீதிமன்றத்தின் கையில்தான் இருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் 17-ம் தேதிதான் பிசிசிஐ மனு விசாரணைக்கு வருகிறது. நீதிமன்றம் பதவி நீட்டிப்பு தருகிறதா இல்லையா என்பது தெரியாது.

இருவரும் இல்லாத சூழலில் அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் புதிய தலைவரை, செயலாளரை நியமிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x