Last Updated : 27 Jul, 2020 01:46 PM

 

Published : 27 Jul 2020 01:46 PM
Last Updated : 27 Jul 2020 01:46 PM

இந்தியாவில் 2023-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கான சூப்பர் லீக் தகுதிச்சுற்று: ஐசிசி அறிமுகம் 

இந்தியாவில் 2023-ம் ஆண்டு நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டித்தொடரில், சூப்பர் லீக்கில் பங்கேற்கும் அணிகளுக்கான தகுதிச் சுற்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று அறிமுகம் செய்தது.

50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 2023-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 7 இடங்களில் இருக்கும் அணிகள், போட்டியை நடத்தும் இந்திய அணி ஆகியவை நேரடியாகத் தகுதி பெறும். அந்த வகையில் தரவரிசையில் முதல் 7 இடங்களில் இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, போட்டியை நடத்தும் இந்தியா ஆகியவை நேரடியாகத் தகுதி பெறும்.

ஐசிசியில் முழு உறுப்பினராக இருக்கும் 12 அணிகளில் 8 அணிகள் நேரடியாகத் தகுதி பெற்றுவிடும். மீதமுள்ள 4 அணிகள் அதாவது மே.இ.தீவுகள், ஆப்கானிஸ்தான், ஓமன், அயர்லாந்து ஆகியவை மற்றும் 2015-17 உலகக் கிரிக்கெட் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற நெதர்லாந்து ஆகிய 5 அணிகளுக்கும் இடையே தகுதிச்சுற்று நடத்தப்பட்டு அதில் முதல் இரு இடங்களைப்பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் தகுதி பெறும்.

இந்த 5 அணிகளுக்கும் இடையிலான தகுதித்சுற்றைத்தான் ஐசிசி இன்று அறிமுகம் செய்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வருவதால், நெதர்லாந்து உள்பட 5 அணிகளுக்கும் இடையே தகுதிச்சுற்று நடத்துவது என்பது கடினமானது.

ஆதலால், இந்த 5 அணிகளும், தங்களுக்குள் மோதும் போட்டித்தொடர்கள், மற்றும் ஏற்கெனவே தகுதிபெற்ற 8 அணிகளுடன் மோதும் போட்டிகளும் தகுதிச்சுற்றாகவே கருதப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

வழக்கமான தகுதிச்சுற்று என்பது 5 அணிகளுக்கு இடையே மட்டும்தான் நடத்தப்படும். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக 8 அணிகளுடன் இந்த 5 அணிகள் மோதும் வழக்கமான கிரிக்கெட் தொடரைக் கூட தகுதிச்சுற்றாகக் கருதப்படுகிறது.

அதன்படி முதல் தகுதிச்சுற்று வரும் 30-ம் தேதி இங்கிலாந்து-அயர்லாந்து இடையே நடக்கிறது. இதில் இங்கிலாந்து அணி ஏற்கெனவே உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுவிட்டது. இருப்பினும், இங்கிலாந்து-அயர்லாந்து ஒருநாள் தொடர், அயர்லாந்து அணிக்கு தகுதிச்சுற்றாக மாற்றப்பட்டுள்ளது. இதில் அயர்லாந்து அணிகள் பெறும் வெற்றி தகுதிச்சுற்றுக்கான புள்ளியாகக் கருதப்படும்.

முதல் கட்டமாக இங்கிலாந்து-நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான அட்டவணையை மட்டும் ஐசிசி அறிவித்துள்ளது. அடுத்தகட்ட அட்டவணையைப் பின்னர் அறிவிப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிசி பொதுமேலாளர் ஜெப் அலார்டைஸ் இன்று நிருபர்களிடம் கூறுகையில், “ஐசிசியின் 13 உறுப்பினர்களில் தரவரிசையில் முதல் 7 இடங்களில் இருக்கும் அணிகள், 2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைப் போட்டியை நடத்தும் இந்திய அணி ஆகியவை நேரடியாகத் தகுதி பெறும். மீதமுள்ள 4 அணிகள், நெதர்லாந்து அணிகளுக்கு இடையே சூப்பர் லீக்கிற்கான தகுதிச்சுற்று நடத்தப்படுகிறது.

சூப்பர் லீக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள் சார்ந்துள்ள நாடுகளில் 4 போட்டிகளிலும் வெளிநாடுகளில் 4 போட்டிகளிலும் 3 ஆட்டங்கள் கொண்ட தொடராக விளையாட வேண்டியது இருக்கும். இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெறும்.

கரோனா வைரஸ் பரவலால் 5 அணிகளுக்கு இடையே போட்டியை நடத்துவதில் இருக்கும் சிக்கலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளது. 5 அணிகளும் தாங்கள் மோதும் போட்டியில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளிகள் தரப்படும். சமனில் முடிந்தால், போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா 5 புள்ளியும் வழங்கப்படும்.

ஒட்டுமொத்தமாக 5 அணிகளும் 8 ஒருநாள் தொடரில் விளையாட வேண்டியது இருக்கும். முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் சமமான புள்ளிகள் எடுத்தால் மற்ற ஆட்டங்களில் குவித்த ரன் ரேட் கணக்கில் கொள்ளப்படும்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x