Published : 21 Jul 2020 06:30 AM
Last Updated : 21 Jul 2020 06:30 AM

2020 டி20 உலகக்கோப்பையை ஒத்தி வைத்தது ஐசிசி: இந்தியாவில் நடைபெறும் 2023 உ.கோப்பை தேதியும் மாற்றம்

2020 அக்டோபர்-நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடப்பதாக இருந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022-ம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

திங்களன்று நடந்த ஐசிசி வாரியக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு முன் கூட்டியே எதிர்பார்க்கப்பட்டதும், திரைமறைவில் இதை நடத்தக் கூடாது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் கொஞ்சம் பிசிசிஐ-யும் கூட வேலை செய்தன. ஆனால் கரோனா வைரஸ்தான் உ.கோப்பை ஒத்திவைப்புக்குக் காரணம். ஐபிஎல் இதே கரோனா காலக்கட்டத்தில் நடக்கும் என்று தெரிகிறது.

ஒரு புறம் கரோனா அச்சுறுத்தலினால் 16 அணிகளை ஒரே இடத்தில் கூட்டி அனைத்து வீரர்களுக்கும் பயோ-செக்யூர் சூழலை அமைத்துக் கொடுப்பது இயலாத காரியம் என்றாலும், இந்திய-ஆஸ்திரேலியா தொடர், ஆஸி.-இங்கிலாந்து என்ற இருதரப்பு தொடர்களில் ஐசிசி தொடர்களை விட பணவரத்து அதிகம் என்பதால் ஆஸி. கிரிக்கெட் வாரியத்தின் ஆசி டி20 உ.கோப்பைக்குக் கிடைக்கவில்லை. இதன் பின்னாடி நகத்தைக் கடித்தபடி ஒளிந்து கொண்டிருந்த பிசிசிஐ, ஐபிஎல் வாய்ப்புக்காக பார்த்துக் கொண்டிருந்தது, இப்போது ஐபிஎல் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அதே போல் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பையும் பிப்ரவரி - மார்ச் 2023லிருந்து அக்டோபர்-நவம்பர் 2023 என்ற மழை சீசனுக்கு மாற்றப்பட்டுள்ளது.

2021 மற்றும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை எந்த நாட்டில் நடைபெறும் என்பதை ஐசிசி இந்தக் கூட்டத்தில் அறிவிக்கவில்லை. 2021 உலகக்கோப்பையை நடத்த இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதி வருகின்றன. 2022-ல் டி20 உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்த வேண்டுமென்றால் உடனடியாக 2023 ஐசிசி 50 ஒவர் உலகக்கோப்பை வந்து விடும், இரண்டுக்கும் இடையே போதுமான இடைவெளி தேவை என்று பிசிசிஐ கருத 2022 டி20 உலகக்கோப்பையை ஆஷஸ் தொடருக்கு முன்னால் நடத்த ஆஸ்திரேலியா தயக்கம் காட்டி வருகிறது.

இப்போதைய நிலவரப்படி 2021 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் என்ற நிலைதான் உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் 2020-ஐ நடத்த செப்டம்பர் 26 முதல் நவம்பர் 7 வரை அல்லது செப்டம்பர் 26 முதல் நவம்பர் 14 வரை ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x