

இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து ஆதரிப்பதில் விராட் கோலி, சவுரவ் கங்குலியைப் போல இருப்பதாக இர்ஃபான் பதான் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியிருக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், "விராட் கோலி, கங்குலியைப் போலவே இருக்கிறார். இளம் வீரர்களுக்கு மிக மிகச் சிறப்பான ஆதரவு தருகிறார். அவரைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் உள்ளது. அவர் தானாகவே முன்வந்து இளைஞர்களை ஆதரிப்பார். ரிஷப் பந்த் விஷயத்தில் அதை நாம் பார்த்திருக்கிறோம். அதை வெளிப்படையாக அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுவதையும் பார்த்திருக்கிறோம்" என்று பேசியுள்ளார்.
இதே நிகழ்ச்சியில் பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் க்ரயம் ஸ்வான், ரிஷப் பந்த் குறித்துப் பாராட்டிப் பேசியுள்ளார்.
"ரிஷப் பந்த் கிரிக்கெட் விளையாடும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இர்ஃபான் சொல்வது சரிதான். ஏனென்றால் ரிஷப்புக்கு நல்ல ஆதரவு உள்ளது. இங்கிலாந்தில் அவர் ஆடிய டெஸ்ட் போட்டி நினைவில் இருக்கிறதா?
அவர் களமிறங்கி சந்தித்த முதல் பந்தோ, இரண்டாவது பந்தோ, சுழற்பந்து வீச்சாளரின் தலைக்கு மேல் சிக்ஸுக்குப் பறந்தது. இந்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விசேஷமான ஒருவராக இருப்பார் என்று அப்போது நினைத்தேன். ஏனென்றால் அவர் மிகவும் இளமையானவர். அதே நேரம் தனித்துவத்துடன் ஆடினார். அவரை ஆதரிக்கும் அணி அவரைச் சுற்றி இருக்கிறது" என்று ஸ்வான் பேசியுள்ளார்.