Published : 19 Jul 2020 04:54 PM
Last Updated : 19 Jul 2020 04:54 PM

தாதா-வா? , தோனியா? என்றால் என் ஓட்டு தாதா கங்குலிக்குத்தான்: பார்த்திவ் படேல் திட்டவட்டம்

இந்திய கிரிக்கெட் அணியை வளர்த்தெடுத்த கேப்டன் யார் என்றால் தன் ஓட்டு சவுரவ் கங்குலிக்குத்தான் என்று இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பார்த்திவ் படேல் கூறியதாவது:

இரு கேப்டன்களுக்கும் இடையேயான் போட்டி மதிப்புடையதுதான், ஒருவர் அணியை வளர்த்தெடுத்தார், ஒருவர் நிறைய கோப்பைகளை வென்றுள்ளார்.

கங்குலி 2000-ல் கேப்டனாக வந்த போது இந்திய அணி கடினமான, சிக்கல் நிறைந்த சூழலில் இருந்தது. அங்கிருந்து அணியைக் கட்டமைத்து அயல்நாடுகளில் வென்றோம் மே.இ.தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் வென்று பாகிஸ்தானில் தொடரை வென்றோம்.

2003 உலகக்கோப்பையை எடுத்துக் கொண்டால் இந்திய அணி இறுதிப்போட்டி வரை வரும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் ஆனால் தாதா தலைமையில் இறுதிக்கு வந்தோம்.

தோனியைப் பொறுத்தவரை ஏகப்பட்ட ட்ராபிக்களை வென்றுள்ளார். அதிகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனிதான்.

உடைப்பிலிருந்து இந்திய அணியை தூக்கி நிறுத்திய கங்குலிக்குத்தான் கேப்டனாக என் ஓட்டு. நான் 2-3 ஆண்டுகள் தாதாவின் கேப்டன்சியில் ஆடியிருக்கிறேன். அடிலெய்டில் வென்ற போட்டியில் நான் ஸ்டம்பிங்கை விட்டது கூட என் நினைவில் உள்ளது.

ஆனால் கேப்டன் கங்குலி வீரர்களை ஆதரிப்பார், யாரும் அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்ற பயம் வேண்டாம் என்று வீரர்களிடத்தில் நேரடியாகவே கூறுவார்.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் கங்குலி சதம் எடுத்த பிறகு நான் கில்லஸ்பியின் புதியப் பந்தை எதிர்கொண்டு ஆடிய போது ஒவ்வொரு பந்தை ஆடிய பிறகும் வந்து என்னைப் பாராட்டுவார். இதுதான் தாதாவினுடைய கேப்டன்சி வித்தியாசம். எனக்கு மட்டுமல்ல எல்லா வீரர்களுக்கும் தாதா இப்படிச் செய்துள்ளார். என்றார் பார்த்திவ் படேல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x