Published : 18 Jul 2020 12:35 PM
Last Updated : 18 Jul 2020 12:35 PM

நான் ஒதுக்கப்பட்டவனே.. ஒரே சீருடை, ஒரே தேசிய கீதம் ஆனால் என்னுடன் யாரும் உணவு உண்ண மாட்டார்கள்: தெ.ஆ. அணியில் நிறவெறி- மகாயா நிடினி வேதனை  

மகாயா நிடினி.

தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த கருப்பரின வேகப்பந்து வீச்சாளரான மகாயா நிடினி தான் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆடிய காலத்தில் தான் ஒதுக்கப்பட்ட விதம் குறித்து வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.

1998 முதல் 2012 வரை கிரிக்கெட்டில் இருந்த பிரமாதமான வேகப்பந்து வீச்சாளரான மகாயா நிடினி 101 டெஸ்ட் போட்டிகளில் 397 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 173 ஒருநாள் போட்டிகளில் 266 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் சிக்கன விகிதம் ஓவருக்கு 4.53 தான்.

1998-ல் இலங்கைக்கு எதிராக கேப்டவுனில் டெஸ்ட்டில் அறிமுகமான நிடினி, 2009-ல் இங்கிலாந்துக்கு எதிராக டர்பனில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதே போல் 1998-ல் நியூஸிலாந்துக்கு எதிராக பெர்த்தில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணியில் ஒரு கருப்பராக ஓய்வறையைப் பகிர்ந்து கொண்டவர் முதல் முறையாக தான் நடத்தப்பட்ட விதம் குறித்து மனம் திறந்துள்ளார். இவருடன் ஷான் போலக், லான்ஸ் குளூஸ்னர், மார்க் பவுச்சர், ஜாக் காலிஸ் உள்ளிட்ட வீரர்களுடன் ஆடிஉள்ளார்.

இந்நிலையில் நிறவெறிக்கு எதிரான இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்த மகாயா நிடினி, “நான் அணிக்கு ஆடியக் காலக்கட்டத்தில் தனிமையில் தான் எப்போதுமே இருந்தேன்.

டின்னருக்குச் செல்லலாம் வா என்று என் அறைக்கதவை யாரும் தட்டியதில்லை. அணியில் சகவீரர்கள் என் முன்னாலேயே திட்டம் எல்லாம் போடுவார்கள் ஆனால் என்னை ஒதுக்கி விடுவார்கள். காலை உணவுக்குச் செல்லும்போது கூட என் மேஜையில் என்னுடன் யாரும் உணவருந்த வர மாட்டார்கள், நான் ஒதுக்கப்பட்டவனாகவே இருந்தேன்.

நாங்கள் அணிவதென்னவோ ஒரே சீருடை, ஒரே தேசிய கீதத்தைத்தான் பாடுவோம் ஆனால் எப்போதும் நான் மட்டும் தனிமையில்தான்.

இதனாலேயே அணி வீரர்கள் செல்லும் பேருந்தில் செல்ல மாட்டேன், டீம் பஸ் டிரைவரிடம் என் கிட் பேகை கொடுத்து விட்டு நான் ஓடியே தான் கிரிக்கெட் மைதானத்துக்கு வருவேன். திரும்ப வரும்போதும் அப்படியேதான் ஓடி வருவேன்.

அவர்களுக்கு நான் ஏன் அப்படிச் செய்கிறேன் என்பது புரியவில்லை. நான் எதைத் தவிர்ப்பதற்காக இப்படி ஓடியே வருகிறேன் என்பதை அவர்களுக்கு நான் கூறியதும் இல்லை, இதில் சிக்கல் இல்லை, நான் எதையும் எதிர்கொள்ள வேண்டியதில்லாமல் போனது.

நான் உண்மையில் என் தனிமையிலிருந்துதான் ஓடினேன், டீம் பஸ்சில் நான் கடைசி சீட்டில் அமர்ந்தால் அவர்கள் அனைவரும் என்னைத் தனியாக விடுத்து முதல் இருக்கைகளில் அமர்வார்கள். நாங்கள் வெற்றி பெறும்போதெல்லாம் ஏகக்குஷிதான், ஆனால் தோல்வியடைந்தால் என்னை சுட்டிக்காட்டிக் குற்றம் சுமத்துவார்கள்.

எனக்கு மட்டுமல்ல என் மகன் தாண்டோவுக்கு இதே நிறவெறி ட்ரீட்மெண்ட்தான். யு-19 கேம்புக்கு செல்வதையே அவன் நிறுத்தி விட்டான், ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அதிலிருந்து தப்பித்ததன் பின்னணி, அவனுக்கும் ஏற்பட்ட இழிவுதான் காரணம்” இவ்வாறு வேதனையுடன் கூறினார் மகாயா நிடினி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x