

அமெரிக்க கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் போலீஸாரால் கொல்லப்பட்டதையடுத்து உலகம் முழுதும், ‘கருப்பர் உயிர் முக்கியம்’ என்ற போராட்டக்களம் விஸ்தீரணம் அடைந்து வருகிறது. இது நிறவெறிக்கு எதிரான பெரிய குரலாக உலகம் முழுதும் ஒலித்து வருகிறது.
உலகம் முழுதும் விளையாட்டு வீரர்கள் உட்பட பலதுறையைச் சார்ந்தவர்களும் இதைக் கையில் எடுத்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் லுங்கி இங்கிடி இதற்கு ஆதரவு தெரிவிக்க பலரும் அவரைப் பின்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் லுங்கி இங்கிடிக்கான தனது ஆதரவு மட்டுமல்லாமல் உலகம் முழுதுமே சாதி, மத, நிற வேறுபாடுகளின்றி இந்த நிறவெறிக்கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று ஹஷிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.
“இஸ்லாமிய மரபில் முதல் மனிதன் ஆதாம் கருப்புத் தோலுடையவர்தான். எனவே மானுடகுலத்துக்கே இந்தப் பாரம்பரியத்தின் ஆழமான வேர் இருக்கிறது. அதனால் கருப்பு என்று கூறுவதால் கிலேசமடையத் தேவையில்லை.
மேலும் ஒரு சாதிக்கு எதிராக இன்னொரு சாதி, ஒரு நிறத்துக்கு எதிராக இன்னொரு நிறம் என்று மனிதர்களில் பாகுபாடு காட்டுவது பிரமையின்பாற்பட்டதே.
ஆனால் நான் உட்பட நம்மில் பலர் இந்த பாகுபாடுகளின் வசைகளையும் கொடுமைகளையும் எதிர்கொண்டுள்ளோம். ஆகவே லுங்கி இங்கிடி போன்ற விதிவிலக்கான இளைஞர்கள் எங்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்வதை வரவேற்கிறோம். நன்றி சகோதரா.
இந்த நாட்டிலும் உலகம் முழுதும் ஒடுக்கப்பட்டவர்கள் அதிகம். அனைத்து நிறங்களிலும் அனைத்து துறைகளிலும் ஒடுக்குதல் உள்ளது. கிரிக்கெட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. கருப்பர்கள்தான் கொடுமைகளை அதிகம் அனுபவித்துள்ளனர். ஆனால் பலர் வேறு வகையில் தங்களை திருப்திப்படுத்திக் கொள்ளலாம், ஆனால் இவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி என்னவெனில், ‘நிறவெறியை அனுபவித்து அதைப்பற்றி தெரிந்தவர்களும், தெரியாத நீங்களும் ஒன்றா?’ என்ற கேள்வியையே.
ஏன் ’கருப்பர்கள் உயிர் முக்கியம்’ எங்களுக்கு முக்கியமானது எனில் நாங்கள் அனைவரும் கருப்பர்களே.
உலகில் ஒடுக்கப்பட்டோர் அனைவருக்காகவும் நான் நிற்கிறேன் அதனால்தான் லுங்கி இங்கிடிக்காகவும் நான் நிற்கிறேன்.” என்று ஹஷிம் ஆம்லா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.