Published : 15 Jul 2020 05:01 PM
Last Updated : 15 Jul 2020 05:01 PM
வரும் செப்டம்பர் மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்தத் தொடர் ஒத்திவைக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை பிசிசிஐ சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றபோதிலும், விரைவில் அறிக்கை வெளியாகலாம் என்று பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல நியூஸிலாந்து ஏ அணியும் இந்தியா வருவதாக இருந்த திட்டமும் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “வரும் செப்டம்பர் மாதம் இங்கிலாந்து அணி இந்தியாவில் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடத் திட்டமிட்டிருந்தது.
இப்போதுள்ள சூழலில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்குப் பயணிக்கும் நிலையில் இல்லை என்பதால், இந்தத் தொடர் ரத்தாகும். வரும் வெள்ளிக்கிழமை பிசிசிஐ அமைப்பின் உயர்மட்டக்குழு கூடுகிறது. இந்தக் குழுவில் இந்திய அணியின் எதிர்காலப் பயணத்திட்டம் குறித்து மறுதிட்டமிடல் செய்யப்படும்.
இந்தக் கூட்டத்தில் இங்கிலாந்து பயணம் ஒத்திவைப்பு அல்லது ரத்து என்பதில் இறுதிக்கட்ட அறிவிப்பு வெளியாகும். நியூஸிலாந்து ஏ அணி ஆகஸ்ட் மாதம் இந்தியா வருவதாக இருந்த திட்டமும் ரத்தாகும்.
ஆனால், இந்தியாவில் சூழல் நிலைமை சரியானால் இங்கிலாந்து வருவதற்கு வாய்ப்புள்ளது.
ஆனால், இங்கிலாந்து ஊடகங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு செப்டம்பரில்தான் இந்தத் தொடர் நடக்கும் எனத் தெரிவிக்கின்றன’’ எனத் தெரிவித்தார்.
117 நாட்களாக சர்வதேச கிரிக்கெட் ஏதும் நடக்காமல் இருந்த நிலையில் இங்கிலாந்து, மே.இ.தீவுகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சவுத்தாம்டனில் நடந்தது. கரோனாவிலிருந்து மெல்ல கிரிக்கெட் வாழ்க்கை இயல்புக்குத் திரும்பி வருகிறது. ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் கரோனா பாதிப்பு குறையாமல் இருப்பதால், செப்டம்பர் வரையிலான தொடர் ரத்தாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT