Published : 13 Jul 2020 12:22 PM
Last Updated : 13 Jul 2020 12:22 PM

பிரமாதமான அணியை கங்குலி உருவாக்கி அதை அப்படியே தட்டில் வைத்து தோனிக்கு அளித்தார்: கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கருத்து 

யார் சிறந்த கேப்டன் கங்குலியா, தோனியா என்பதைக் கணிக்க பல்வேறு அளவுகோல்களை முன் வைத்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈஎஸ்பின் கிரிக் இன்போ இணைந்து நடத்திய கருத்தாய்வில் பங்குபெற்றவர்களில் முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தும் ஒருவர்.

இவரோடு தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித், குமார் சங்கக்காரா, கவுதம் கம்பீர் ஆகியோரும் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

இதில் கங்குலி, தோனி குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியதாவது:

கடினமான நிலைமைகளில் கங்குலி டெஸ்ட் போட்டிகளை வெல்லத் தொடங்கினார். அவரது தலைமையில்தான் இங்கிலாந்தை இங்கிலாந்தில் வீழ்த்த முடியும். ஆஸ்திரேலியாவை அங்கும் பாகிஸ்தானை பாகிஸ்தானிலும் வீழ்த்த முடியும் என்ற மன உறுதியை இந்திய அணி பெற்றது. இந்த நம்பிக்கை கங்குலி மூலம் கிடைத்தது.

கங்குலி இந்திய அணியின் மன அமைப்பையே மாற்றினார். பிறகு பிரமாதமான ஒரு வெற்றி அணியை உருவாக்கி தட்டில் வைத்து, ‘தோனி, இதோ அருமையான அணியை அளித்துள்ளேன், நாங்கள் தொடங்கியதை நீங்கள் தொடர வேண்டும்’ என்றார்.

தோனியைப் பொறுத்தவரை 2011 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி, 2007 டி20 உலகக்கோப்பை என்று ஒருநாள், டி20-யில் தோனியின் தாக்கம் கேப்டனாக மிகப்பெரியது. கேப்டனாக மட்டுமல்ல, வீரராக, விக்கெட் கீப்பராக பெரிய தாக்கம் செலுத்தியுள்ளார், இதனை மறந்து விட வேண்டாம்.

இவ்வாறு கூறினார் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x