Last Updated : 23 Sep, 2015 09:56 AM

 

Published : 23 Sep 2015 09:56 AM
Last Updated : 23 Sep 2015 09:56 AM

இந்தியா-நியூஸி. மோதும் டெஸ்ட் ஹாக்கி தொடர்: அக்டோபர் 2-ல் தொடக்கம்

இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையிலான 6 போட்டிகள் கொண்ட் டெஸ்ட் ஹாக்கி தொடர் வரும் அக்டோபர் 2 முதல் 11 வரை நியூஸிலாந்தின் ஆக்லாந்து, நெல்சன், கிறைஸ்ட்சர்ச் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது.

இதில் முதல் இரு ஆட்டங்களில் நியூஸிலாந்து ஏ அணியுடனும், எஞ்சிய 4 ஆட்டங்களில் நியூஸிலாந்து சீனியர் அணியுடனும் இந்திய அணி மோதுகிறது என ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் கடைசியில் நடைபெறவுள்ள உலக ஹாக்கி லீக் இறுதிப் போட்டி மற்றும் 2016-ல் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் பங்கேற்கவுள்ள இந்திய அணிக்கு, நியூஸிலாந்து தொடர் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நியூஸிலாந்து அணி, ஓசியானியா கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. ஒசியானியா போட்டியில் வென்றால்தான் நியூஸிலாந்து அணி, ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகளைத் தோற்கடித்தது. அதனால் நியூஸிலாந்து தொடரில் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தியா தீவிரம்

நியூஸிலாந்து தொடர் குறித்துப் பேசிய ஹாக்கி இந்தியா பொதுச் செயலாளர் முகமது முஷ்டாக் அஹமது, “அடுத்து நடைபெறவுள்ள முக்கியமான போட்டிகளைக் கருத்தில் கொண்டே நியூஸிலாந்து தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தொடர்கள் எதிரணிகளின் ஆட்ட உத்தியைப் புரிந்துகொள்ள இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்.

அதற்கேற்றவாறு நாமும் உத்திகளை வகுக்க முடியும். கடந்த போட்டிகளில் விளையாடியதைப் போன்று நியூஸிலாந்து தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் இந்திய அணி தீவிரமாக உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x