Published : 30 Jun 2020 03:59 PM
Last Updated : 30 Jun 2020 03:59 PM

விரட்டல் மன்னனின் சாகச விரட்டல்; 2014 அடிலெய்ட் டெஸ்ட் ஒரு மைல்கல்: விராட் கோலி 

2014 அடிலெய்ட் டெஸ்ட் போட்டி இந்திய அணியின் டெஸ்ட் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தோனி அந்த டெஸ்ட் போட்டியில் ஆட முடியாததால் விராட் கோலி பொறுப்பு கேப்டனாக நியமிக்கப்பட்டார், இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை புரிந்த விராட் கோலி, மைக்கேல் கிளார்க்கின் டிக்ளேர் முடிவை அவரது தலைவலியாக தன் அதிரடி இன்னிங்ஸ் மூலம் இலக்கி விரட்டி மாற்றினார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

மைக்கேல் கிளார்க் டாஸ் வென்று முதலில் பேட் செய்ய ஆஸ்திரேலிய அணி வார்னர் (145), ஸ்மித் (162 நாட் அவுட்), கிளார்க் (128) என்று சதம் அடிக்க 517/7 என்று டிக்ளேர் செய்தது.

இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் முரளி விஜய் அபாரமாக ஆடி 53 ரன்களை எடுக்க, புஜாரா 73 ரன்களையும் கேப்டன் விராட் கோலி 115 ரன்களையும் எடுத்தார். ரஹானே 62, ரோஹித் சர்மா 43, சஹா 25, ஷமி 34 என்று பங்களிப்புச் செய்ய இந்திய அணியும் 444 ரன்கள் என்று பதிலடி கொடுத்தது.

2வது இன்னிங்ஸிலும் டேவிட் வார்னர் சதம் எடுக்க ஆஸ்திரேலியா 290/5 என்று டிக்ளேர் செய்ய, இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 364 ரன்கள்.

கடைசி நாளில் இந்தியா நினைத்திருந்தால் ட்ராவுக்கு ஆடியிருக்கலாம் ஆனால் ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்துக்கு எதிராக அது எதிர்மறை அணுகுமுறையாகி விடும் என்ற நிலையில் புதிய கேப்டன் விராட் கோலியும் அணி இயக்குநர் ரவிசாஸ்திரியும் இலக்கை விரட்டிப் பார்ப்போம் என்ற சாகச முயற்சியில் ஈடுபட்டனர்.

ஷிகர் தவன், புஜாரா சொற்ப ரன்களில் வெளியேற முரளி விஜய்யும், கோலியும் இணைந்து 57/2 என்ற நிலையிலிருந்து 50 ஓவர்களில் 185 ரன்கள் கூட்டணி அமைத்தனர், முரளி விஜய் டெஸ்ட் வாழ்க்கையின் ஆகச்சிறந்த இன்னிங்ஸ் ஆக அது அமைந்தது. 10 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் அவர் 99 ரன்களில் லயன் பந்தில் துரதிர்ஷ்டவசமாக எல்.பி. ஆனார். இந்திய ஸ்கோர் 242/3 என்று வெற்றி ஒளி லேசாக இந்திய கதவுகளின் வழியே எட்டிப்பார்த்தது. ஆனால் அதே லயன் ஓவரில் ரஹானேவும் 6 ரன்களில் வெளியேற கோலி வெறுப்படைந்தார்.

ரோஹித் சர்மா, சஹா, ஆகியோரையும் லயன் வீழ்த்த 299/6 என்று ஆனது. கோலி ஒரு முனையில் 69 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் அரைசதம் கடந்து பிறகு 135 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 100 அடித்து 175 பந்துகளில் 141 ரன்களை 16 பவுண்டரி ஒரு சிக்சருடன் எடுத்து நேதன் லயனின் வெளியே அடிக்க வேண்டிய ஷார்ட் பிட்ச் பந்தை அவசரகதியில் புல்ஷாட் ஆடியதில் டீப்பில் கேட்ச் ஆனது. கோலி ஆட்டமிழந்தவுடன் 315 ரன்களில் இந்தியா ஆல் அவுட் ஆகி 48 ரன்களில் தோல்வி தழுவியது. ஆட்ட நாயகன் விருது கோலிக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் நேதன் லயனுக்கு கொடுக்கப்பட்டது.. இவ்வாறாக கேப்டன் ஆன முதல் டெஸ்ட்டிலேயே ஆஸ்திரேலியா வீரர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார் விராட் கோலி. மிகச்சிறந்த இரண்டு சதங்கள். மறக்க முடியாதது.

அதை நினைவுகூர்ந்த விராட் கோலி தன் ட்விட்டர் பக்கத்தில், “நாங்கள் இன்று எப்படி ஒரு டெஸ்ட் அணியாக திகழ்கிறோம் என்பதற்கு அந்த அடிலெய்ட் டெஸ்ட் ஒரு முக்கிய அங்கம். அடிலெய்ட் 2014 டெஸ்ட் உணர்ச்சி நிரம்பிய ஒரு போட்டி. இருதரப்பிலும் உணர்ச்சிகள் நிரம்பி வழிந்தன. ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக அமைந்தது.

நாங்கள் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் மிக நெருக்கமாக இலக்கை நோக்கி வந்தோம். அதாவது நாம் மனது வைத்தால் எதுவும் சாத்தியம் என்பதை அந்த டெஸ்ட் கற்றுக் கொடுத்தது. தொடக்கத்தில் கடினமாகத் தெரிந்த ஒன்றை நோக்கி நாங்கள் அர்ப்பணிப்புடன் பயணித்தோம். ஏறக்குறைய வென்றிருப்போம். ஒரு டெஸ்ட் அணியாக எங்கள் பயணத்தில் நிச்சயம் அடிலெய்ட் டெஸ்ட் ஒரு மைல்கல் தான்” என்றார்.

அந்தத் தொடரில்தான் பாதியிலேயே தோனி டெஸ்ட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்க, இந்தியா 0-2 என்று தோல்வி தழுவியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x