

கிரிக்கெடில் மேட்ச் பிக்ஸிங், ஊக்கமருந்து பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்கு என்ன தண்டனை வீரர்களுக்கு வழங்கப்படுமோ அதேபோன்ற தண்டனை சகவீரர்களை இனவெறியுடன் பேசும் வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று மே.இ.தீவுகள்அணியின் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் வலியுறுத்தியுள்ளார்
இங்கிலாந்தில் 21 நாட்கள் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ம் தேதி சவுத்தாம்டனிலும், ஜூலை 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஓல்ட் ட்ராபோர்டிலும், ஜூலை 24-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மீண்டும் ஓல்ட் ட்ராபோர்டிலும் விளையாடுகின்றனர்.
இந்த டெஸ்ட் போட்டி மே மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டு கரோனவால் தள்ளி வைக்கப்பட்டு ஜூலையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் நகரில் மே.இ.தீவுகள் கேப்டன் ஹோல்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவர் கூறியதாவது:
கிரிக்கெட் விளையாட்டில் ஊக்கமருந்து பயன்படுத்தும் குற்றம், மேட்ச் பிக்ஸிங், ஊழல் போன்றவற்றுக்கும், இனவெறியுடன் ஒரு வீரரை பேசுவதற்கும் எந்த விதமான வேறுபாடும் இ்ல்லை என்றுதான் நினைக்கிறேன். இனவெறியுடன் சக வீரரை ஒரு வீரர் பேசினால், அதை ஊக்கமருந்து , மேட்ச்பிக்ஸிங் குற்றத்துக்கு இணையாகவே கருத வேண்டும்
ஐசிசி விதிமுறையின்படி, விதிமுறையை மீறி ஒருவீரர் இனவெறிக் குற்றத்தை ஒரு வீரர் செய்தால் அவரை வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்க வேண்டும். முதல்முறையாக குற்றம்செய்தால் 4 சஸ்பென்ஷன் புள்ளிகள் வழங்க வேண்டும்.
இரு புள்ளிகளுக்கு ஒரு டெஸ்ட் அல்லது இரு ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை செய்யப்படுவார் அந்த அடிப்படையில்இரு டெஸ்ட் அல்லது 4 ஒரு போட்டிகளில் விளையாட தடை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு கிரிக்கெட் தொடர் தொடங்கும் முன், இனவெறிக்கு எதிரான விஷயங்களை வீரர்களிடத்தில் தெரிவி்க்க வேண்டும். ஊக்கமருந்து குறித்தும், ஊழலுக்கு எதிரான விஷயங்கள் குறித்தும் போட்டித் தொடர் தொடங்கும் முன் வீரர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுவதுபோல் இனவெறி பேச்சு குறித்தும் கூற வேண்டும்
இதன் மூலம் வீரர்களுக்கு இனவெறி பேச்சு குறித்த அதிகமான விழிப்புணர்வு களத்தில் ஏற்படும். எனக்கு எந்தவிதமான இனவெறிப் பேச்சு அனுபமும் இல்லை, என்னைச் சுற்றியுள்ள வீரர்களுக்கு நடந்ததை உணர்ந்திருக்கிறேன். அங்கு நிற்கக்கூட முடியாது.
கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக மே.இ.தீவுகள் அணி தீவிரமாக ஆதரவு அளிக்கும். அமெரிக்காவில் மட்டுமல்ல உலகில் எங்கு கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக இயக்கம் நடந்தாலும் அதை ஆதரி்ப்போம். ஜூலை 8-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதற்கான ஆதரவைத் தருவோம்” என் தெரிவித்தார்
முன்னதாக தென் ஆப்பிரி்க ஆல்ரவுண்டர் அன்டில் பெலுக்வேயோவை இனவெறியுடன் பேசியதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சர்பிராஸ் அகமதுவை 4போட்டிகளில் விளையாட கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.