Published : 05 Sep 2015 08:50 AM
Last Updated : 05 Sep 2015 08:50 AM
7-வது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி சீனாவின் சாங்ஸவ் நகரில் இன்று தொடங்குகிறது. 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, வட கொரியாவை எதிர்கொள்கிறது.
9 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதேபிரிவில்தான் நடப்பு சாம்பியன் சீனா, மலேசியா, சிங்கப்பூர், வட கொரியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து, சீன தைபே ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தப் போட்டி ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச்சுற்று ஆகும். முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் தகுதி பெறும்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வட கொரியாவை வீழ்த்தி போட்டியை வெற்றியோடு தொடங்குவதில் தீவிரமாக உள்ளது. முன்களத்தைப் பொறுத்தவரையில் ராணி ராம்பால், அனுபா பர்லா, பூனம் பர்லா, நவ்னீத் கவுர், சோனிகா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சமீபத்தில் முடிந்த வால்வோ இன்வைட்டேஷனல் தொடரில் அசத்தலாக ஆடிய ராணி ராம்பால் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
துணை கேப்டன் நவ்ஜோத் கவுர், லில்லி சானு, லில்லிமா மின்ஸ், ரேணுகா யாதவ் ஆகியோர் நடுகளத்தில் பலம் சேர்க்கின்றனர். பின்களத்தைப் பொறுத்தவரையில் தீப் கிரேஸ், நமீதா டோப்போ, பெனால்டி கார்னர் ‘ஸ்பெஷலிஸ்ட்’ ஜஸ்பிரீத் கவுர் என வலுவான வீராங்கனைகள் உள்ளனர்.
இந்தியாவும், வட கொரியாவும் மோதுவது இதுவே முதல்முறையாகும். அதனால் இரு அணிகளுக்குமே மற்ற அணிகளின் ஆட்டத்தைப் பற்றி பெரிதாக தெரியாது. எனினும் அனுபவமிக்க இந்திய அணி, வட கொரியாவை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நடைபெறும் மற்ற ஆட்டங்களில் மலேசியா, சிங்கப்பூரையும், ஜப்பான், சீன தைபேவையும், தென் கொரியா, தாய்லாந்தையும் எதிர்கொள் கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT