Published : 23 Jun 2020 09:12 AM
Last Updated : 23 Jun 2020 09:12 AM

தோனி, கங்குலி, கோலியை வானளாவப் புகழ்கிறோம், தரமான கேப்டன் திராவிடை புகழ்வதில்லை: கவுதம் கம்பீர் வேதனை

இந்திய அணியின் கேப்டனாக பயிற்சியாளர் கிரெக் சாப்பல் காலத்தில் திராவிட் செயல்பட்டார், ஆனால் சிறந்த கேட்பன்கள் வரிசையில் திராவிடுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கம்பீர் வேதனை தெரிவித்தார்.

வெஸ்ட் இண்டீஸில் 2006-ல் திராவிட் தலைமையில் தொடரை வென்றது இந்திய அணி. தென் ஆப்பிரிக்காவில் அந்த மண்ணிலேயே கடினமான அந்த அணியை திராவிட் தலைமையில் ஒரு டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது இந்திய அணி. இதோடு அஜித் வடேகர், கபில்தேவுக்குப் பிறகு இங்கிலாந்தில் திராவிட் தலைமையில்தான் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றது.

இதோடு இதுவரை யாரும் சொல்லாத ஒரு மைல்கல் திராவிட் கேப்டன்சியில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா சாதித்துள்ளது, 17 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி இலக்கை விரட்டுவதில் தொடர்ச்சியாக வெற்றி கண்டது திராவிட் கேப்டன்சியில்தான்.

மேலும் திராவிட் ஒரு அணிக்கான வீரர். விக்கெட் கீப்பிங் என்றால் ஓகே என்பார், 3ம்நிலையில் இறங்கு என்றால் சரி என்பார், 5ம் நிலையில் இறங்கு என்றால் சரி என்பார். எதைப்பற்றியும் கவலைப்படாத ஒரு அபாரமான வீரர் திராவிட்.

ஆனால் கேப்டன்சியில் சிறந்து விளங்கிய திராவிட்டுக்கு உரிய அங்கீகாரத்தை நாம் அளிக்கவில்லை என்று கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார்.

“நான் என் ஒருநாள் அறிமுகப் போட்டியில் கங்குலி தலைமையில் ஆடினேன், டெஸ்ட் அறிமுகம் திராவிட் தலைமையில்தன எனக்கு அரங்கேறியது.

திராவிட் கேப்டன்சிக்கு நாம் உரிய அங்கீகாரத்தை அளிக்கவில்லை என்பது துரதிர்ஷ்டமானது. நாம் கங்குலி, தோனி பற்றி புகழ்கிறோம் விராட் கோலியைப் பற்றி இப்போது பேசுகிறோம். ஆனால் திராவிடும் இந்திய அணிக்கான ஒரு விலைமதிப்பில்லா கேப்டனாவார்.

அவரது சாதனைகள் ஏராளம் ஆனால் நாம் அவரை குறைவாக மதிப்பிடுகிறோம், அதைவிடவும் அவரது கேப்டன்சி திறமைகளை அதிகம் குறைத்து மதிப்பிட்டுள்ளோம்.

அவர் என்ன சொன்னாலும் செய்வார், தொடக்கத்தில் இறங்க வேண்டுமா இறங்குவார், 3ம் நிலை, பினிஷர், எல்லாம் செய்வார், என்னை பொறுத்தவரை அவர்தான் பெரிய தாக்கம் செலுத்தியவர். கங்குலி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய தாக்கம் செலுத்தினார், ஆனால் திராவிட் ஒட்டுமொத்த கிரிக்கெட்டுக்குமே பெரிய தாக்கம்.

இவர் ஏற்படுத்திய தாக்கத்தை சச்சின் டெண்டுல்கர் ஏற்படுத்திய செல்வாக்குடன் ஒப்பிட வேண்டும். சச்சின் டெண்டுல்கர் பெரிய ஆளுமையாக இருக்கும் போது அந்த நிழலிலேயே திராவிட் தன் கிரிக்கெட் காலத்தை செலவழிக்க நேரிட்டது. ஆனால் ஏற்படுத்திய தாக்கம், அளித்த உத்வேகம் அளவில் இருவரும் சமமே.” என்றார் கம்பீர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x