Last Updated : 15 Jun, 2020 02:16 PM

 

Published : 15 Jun 2020 02:16 PM
Last Updated : 15 Jun 2020 02:16 PM

இந்திய அணிக்கு பயிற்சியளிக்க விருப்பமே இல்லை; 7 நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது: மனம் திறந்தார் கேரி கிர்ஸ்டன்

2011-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற போது கிர்ஸ்டனை கொண்டாடிய வீரர்கள்

புதுடெல்லி,


இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர எனக்கு விருப்பமும் இல்லை, நான் அந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யவும் இல்லை, ஆனால், தேர்வுக்கு சென்றபோது எல்லாம் 7 நிமிடங்களில் முடிந்துவிட்டது என்று இந்திய அணிக்க பயிற்சியாளராக தேர்வான அனுபவத்தை சுவாரஸ்யமாக கேரி கிர்ஸ்டன் தெரிவித்தார்

இந்திய அணிக்கு பயிற்சியாளராக 2008-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை கேரி கிர்ஸ்டன் இருந்தார். இவர் இந்திய அணிக்கு பயிற்சியளித்த காலம் பொற்காலம் என்று போற்றப்படுகிறது. ஏனென்றால் கிர்ஸ்டன் பயிற்சி அளித்த காலத்தில்தான் இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதன்முதலாக முதலிடத்தைப் பிடித்தது,2-து முறையாக உலகக்கோப்பைைய தோனி தலைமையில் வென்றது.

நியூஸிலாந்தில் 40 ஆண்டுகளுக்குப்பின் டெஸ்ட் தொடரை வென்றது, உள்நாட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை 2-0 என்று இந்திய அணி வென்றது.

தென் ஆப்பிரிக்காசென்று டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது. 2008 ஆசியக்கோப்ைப, கிட்ப்ளே கோப்பைப் போட்டியில் இறுதிச்சுற்றுவரை இந்திய அணி சென்று தோற்றது. கிர்ஸ்டன் தலைமையில் இந்திய அணி விளையாடிய காலத்தை அனைத்து வீரர்களும் புகழ்கின்றனர்.

இந்த சூழலில் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வந்த தருணத்தை கிர்ஸ்டன் கிரிக்கெட் கலெக்டிவ் தளத்தில் சுவாரஸ்யமாக விளக்கியுள்ளார். அவர் கூறியதாவது:

இந்திய அணிக்கு நான் பயிற்சியாளராகச் செல்ல எனக்கு விருப்பமும் இல்லை, நான் அந்த பதவிக்கு விண்ணப்பமும் செல்லவில்லை. எனக்கு சுனில் கவாஸ்கரிடம் இருந்து எனக்கு ஒரு இமெயில் வந்தது. முதலில் அந்த மெயிலைப் பார்த்தவுடன் அதுபோலியானது என நினைத்து பதில் அளிக்கவில்லை.

ஆனால், மறுபடியும் எனக்கு மின்அஞ்சல் கவாஸ்கரிடம் இருந்து வந்தது. அதில் நீங்கள் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறீர்களா, நேர்காணலுக்கு வருகிறீரக்ளா எனக்கேட்டிருந்தார். எனக்கு வியப்பாக இருந்தது, என்னுடைய மனைவியிடம் இந்த மெயிலை காண்பித்தேன்.

அவரோ சிரித்துக்கொண்டே இந்திய அணிக்கு தவறான ஆள் தேவைப்படுகிறது என்று கிண்டலடித்தார்.
இந்திய அணிக்கு அப்போது சிக்கலான நேரம் கிரேக் சேப்பல் சென்றபின் புதிய பயிற்சியாளரை தேடிக்கொண்டிருந்தார்கள்.

பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் சுனில் கவாஸ்கர், ரவி சாஸ்திரி ஆகியோர்இருந்தார்கள்.அனைவரும் அழைத்தபின் போவோமே என்று இந்தியாவுக்குச் சென்றேன். அப்போது இந்திய அணிக்கு கேப்டனாக அனில் கும்ப்ளே இருந்திருந்தார். நான் நேர்முகத் தேர்வுக்கு சென்றபோது, கும்ப்ளே என்னைப் பார்த்து பலமாகச் சிரித்தார்.

என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே ஏய், கேரி இங்கே என்ன பன்ற, திடீர்னு வந்திருக்க என்றார். இந்திய அணிக்கு பயிற்சியாளர் பணிக்கு நேர்காணலுக்கு வந்துள்ளேன் என்றேன். இதைக் கேட்டு கும்ப்ளே சிரிக்க, அவர் சிரித்தைத் பார்த்து நானும் சிரித்தேன்

நேர்காணலில் அமர்ந்தபோது, நான் ரவி சாஸ்திரியிடம், கவாஸ்கரிடம் எனக்கு பயிற்சியாளர் அனுபவம் கிடையாது, இதுவரை எந்த அணிக்கும் பயிற்சியளிக்கவில்லை. நீங்கள் அழைத்தீர்கள் என்பதால் வந்தேன். நேர்காணலுக்கு கூட தயாராகவில்லை என்று தெளிவாகத் தெரிவித்தேன்.

இந்திய அணியை எவ்வாறு எதிர்காலத்தில் எடுத்துச் செல்லப்போகிறீர்கள் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் கேட்டார். உடனே நான், ஏற்கெனவே நான் சொல்லிவி்ட்டேன் நான் தயாராக வரவில்லை. இதுபோல் கேள்வி கேட்பீர்கள் என எனக்குத் தெரியாது, தயாராக வாருங்கள் என யாரும்கூறவில்லை. நேர்காணலுக்கு வாருங்கள் என்றனர் அதனால் வந்தேன் என்று தெரிவித்தேன்

உடனே ரவி சாஸ்திரி என்னைப் பார்த்து, கேரி, தென் ஆப்பிரிக்காவுக்கு இந்திய அணி சென்றால் வெல்வதற்கான திட்டம் என்ன வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் 3 நிமிடங்கள் ஏதும் பேசவில்லை, உடனே அந்த நேரத்தில், அந்த நாளில் எது தேவையோ அதை சரியாக பயன்படுத்துவேன் என்றேன்

நான் கூறிய பதில் அவர்களுக்கு திருப்திகரமாக இருந்திருந்து. அடுத்த 4 நிமிடத்தில் எனக்கான நேர்காணல் முடிந்துவிட்டது. நான் எழுந்து புறப்பட்டபோது, தேர்வாளர்கள் என்னிடம் பயிற்சியாளர் ஒப்பந்தத்துக்கான ஆவணங்களை அளித்தார்கள். எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

நான் ஒப்பந்தத்தை வாங்கியதும் என்னுடைய பெயரைப் பார்த்தேன் அதில் கிரேக் சேப்பல் பெயர் இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் முந்தைய ஆண்டு ஒப்பந்த ஆவணத்தை அளித்துவி்ட்டீர்கள் என நினைக்கிறேன். ஒப்பந்தத்தில் என்னுடைய பெயர் இல்லை என்று தேர்வாளர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் அதை வாங்கி, பேனால் சேப்பல் பெயரை அடித்துவிட்டு என்னுடைய பெயரை எழுதினார்கள். எல்லாமே 7 நிமிடத்தில் முடிந்துவி்ட்டது.

இவ்வாறு கிர்ஸ்டன் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x