வருவாய் இழப்பை தாங்க முடியாது: காலி ஸ்டேடியங்களில் ஐபிஎல் போட்டிகள்?
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிராண்ட் மதிப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலக ஒளிபரப்பு உரிமைகள் வருவாயில் உலகின் டாப் 5 லீகுகளில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரும் ஒன்று.
எப்படியோ இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறும் என்று தெரிகிறது, இதற்காகத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பதற்கேற்ப ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடர் பற்றிய முடிவையும் தள்ளி வைத்துள்ளார்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு அதன் வருமானத்துக்கேற்ப இந்திய தொடரை நடத்தியாக வேண்டும், இந்தியாவுக்கு ஐபிஎல் நடத்தியேயாக வேண்டும். இதற்கு ஐசிசி தொடர் பலிகடாவாக்கப்படுமென்று ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்திகளின்படி பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இதுதொடர்பாக மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ஐபிஎல் கிரிக்கெட்டை இந்த ஆண்டு எப்படியாவது நடத்தி விடுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. அதாவது காலி மைதானங்களில் நடத்துவதாக இருந்தாலும் பரவாயில்லை. அணி உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், ஒளிபரப்பாளர்கள் என்று இதில் பெரும்பங்கு உடையவர்கள் அனைவரும் ஆவலுடன் ஐபிஎல் தொடரை எதிர்பார்க்கின்றனர்.
மேலும் இந்த ஆண்டே விளையாடுவது குறித்து உள்நாட்டு வெளிநாட்டு வீரர்களும் ஆர்வம் காட்டுவதாக கங்குலி கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் கிரிக்கெட்டின் பிராண்ட் மதிப்பு ரூ.47,500 கோடியாகும். இது நடக்கவில்லை எனில் பிசிசிஐக்கு ரூ5000 கோடி நஷ்டம் ஏற்படும்.
