

தன்னையும் இலங்கை வீரர் திசர பெரேராவையும் ‘kaluu' என்ற இழிசொல்லால் அழைத்ததாக டேரன் சமி சமூகவலைத்தளங்களை அலறவிட்டுள்ள நிலையில் நெட்டிசன்கள் இஷாந்த் சர்மாவின் பழைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றை தோண்டி எடுத்து சர்ச்சையை ஊதிப்பெருக்கி உள்ளனர்.
அந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் இஷாந்த் சர்மா கண்டனத்துக்குரிய அந்தச் சொல்லை டேரன் சமிக்குப் பதிலாகப் பயன்படுத்தியது தெரியவந்தது.
2014-ல் இஷாந்த் சர்மாவின் அந்தப் பதிவில், “நான், புவி, கலூ, மற்றும் கன் ரைசர்ஸ்” என்று இஷாந்த் சர்மா குறிப்பிட்டு பகிர்ந்த புகைப்படத்தில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டேல் ஸ்டெய்ன், இடையே நிற்கும் டேரன் சமியை kaluu என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டேரன் சமி இன்ஸ்டாகிராம் வீடியோவில் கொந்தளித்துள்ள நிலையில் நெட்டிசன்கள் இஷாந்த்சர்மாவை சமியிடம் கோர்த்து விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.
2014 ஐபிஎல் தொடரில் இஷாந்த் சர்மா, டேரன் சமி இருவரும் சன் ரைசர்ஸ் அணிக்கு ஆடினர்.
டேரன் சமியின் குற்றச்சாட்டு குறித்து இர்பான் பதான் ஏ.என்.ஐ. நிறுவனத்திடம் கூறும்போது, “அப்படி ஏதாவது நடந்திருந்தால் அது எங்கள் பார்வைக்குக் கொண்டுவரப் பட்டிருக்கும் எனவே அப்போது இது தொடர்பாக எந்த விவாதமும் எழவில்லை” என்றார்.