Last Updated : 06 Jun, 2020 04:42 PM

 

Published : 06 Jun 2020 04:42 PM
Last Updated : 06 Jun 2020 04:42 PM

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று கூற வெட்கமாக இல்லையா? - பாக். மீது ஆகாஷ் சோப்ரா பாய்ச்சல்

ஆகாஷ் சோப்ரா.

2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வேண்டுமென்றே தோற்றது, இதன் மூலம் பாகிஸ்தானின் வாய்ப்பைக் காலி செய்தது என்று பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதை முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் எழுதியுள்ள சமீபத்திய புத்தகத்தில் அந்தப் போட்டியில் இந்தியாவின் தீவிரமற்ற ஆட்டம் தனக்கு ஆச்சரியத்தை அளித்தது என்றுதான் பென் ஸ்டோக்ஸ் கூறினாரே தவிர வேண்டுமென்றே தோற்று பாகிஸ்தான் வாய்ப்பை காலி செய்தனர் என்று எங்கும் கூறவில்லை, என்று பென் ஸ்டோக்ஸ் பாக். வீரர் ஒருவருக்கு பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் ஆகாஷ் சோப்ரா யூடியூப் சேனலில் பாகிஸ்தான் வீரர்களை காட்டமாக விமர்சித்தார்:

நன்றாக யோசித்துப் பாருங்கள், வேண்டுமென்றே இந்தியா தோற்றது என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லை? ஐசிசி பிராண்ட் தூதராக இருந்த வக்கார் யூனிஸே அப்போது இவ்வாறு கூறியது முறையா? அதாவது இந்தியா வேண்டுமென்றே இங்கிலாந்திடம் தோற்றது என்று அறிக்கை விட்டார் வக்கார் யூனிஸ்.

விராட் கோலி, ரோஹித் சர்மா இடையேயான அந்தப் போட்டியின் கூட்டணி பென்ஸ்டோக்ஸ்க்கு அர்த்தமற்றதாகத் தெரியவில்லை, அல்லது அவர் கடைசியில் தோனியின் அணுகுமுறை குறித்து குழப்பமடைந்தாரா..தெரியவில்லை ஆனால் இந்தியா வேண்டுமென்றே தோற்றது என்று ஸ்டோக்ஸ் எங்கும் கூறவில்லை.

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து இந்திய அணி வேண்டுமென்றே தோற்றது என்று கூறிவருகின்றனர். ஐசிசி அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். நீங்கள் எப்படி அப்படிச் சொல்லலாம்? இந்திய அணிக்கு அப்போது அந்த குரூப்பில் டாப் இடத்தைப் பிடிக்க வேண்டிய தேவை இருக்கும் போது வேண்டுமென்றே தோற்றோம் என்று கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது.

இவ்வாறு விளாசினார் ஆகாஷ் சோப்ரா. இந்தியா அந்தப் போட்டியில் 338 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x