Published : 30 May 2020 02:54 PM
Last Updated : 30 May 2020 02:54 PM

மறக்க முடியுமா? தோனி தலைமை சிஎஸ்கேயைப் புரட்டி எடுத்து இறுதிக்கு கிங்ஸ் லெவனை இட்டுச் சென்ற சேவாக்: ரெய்னாவின் அனல்பறக்கும் அதிரடி வீணான இதே நாள் 

ஐபிஎல் 2014, இதே மே மாதம் 30ம் தேதி கிங்ஸ் லெவன்பஞ்சாப் அணிக்கு ஆடிய விரேந்திர சேவாக், தோனி தலைமை சிஎஸ்கேயை புரட்டி எடுத்து 58 பந்துகளில் 122 ரன்களை விளாசினார். இது வான்கடே ஸ்டேடியம் மும்பையில் நடந்த போட்டி.

பிளே ஆஃப் சுற்றின் 2வது தகுதிச் சுற்று போட்டியில் தான் சேவாக், தோனியின் கேப்டன்சி திறமைக்கு கடும் சவால் அளித்தார். நெஹ்ரா, அஸ்வின், ஜடேஜா போன்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார்.

வழக்கம் போல் எதிரணியினர் புரட்டி எடுக்கும் போதெல்லாம் ‘இந்தியாவின் சிறந்த கேப்டன் தோனி’ ஐடியாக்கள் எதுவும் இல்லாமல் வற்றிப்போவதைத்தான் அன்றைய தினமும் பார்க்க முடிந்தது. எப்போதும் டாஸ் முடிவை சரியாக எடுப்பார் தோனி என்றும் பலரும் கூறிவந்த நிலையில் அன்று டாஸ் வென்று எதிரணியில் சேவாக் இருக்கும் போது கண்மூடித்தனமாக பீல்டிங்கைத் தேர்வு செய்தார் தோனி. நெஹ்ராவை சேவாக் ஒரே ஓவரில் ஆஃப் திசையில் வெறித்தனமான அலட்சியத்துடன் 3 பவுண்டரிகளுக்கு விரட்டியதை மறக்க முடியாது. மனன் வோராவும் இவருக்கு உறுதுணையாக பவர் ப்ளேயில் 6 ஓவர்கள் முடிவில் கிங்ஸ் லெவன் 70/0 என்று விளாசியது. சேவாக் 18பந்துகளில் 42 ரன்கள் என்று ஆக்ரோஷமாக இருந்தார்.

அஸ்வினை 7வது ஓவரில் அழைத்தார் தோனி, வந்தவுடனேயே குட்நைட் அஸ்வின் என்று நேராக சைட் ஸ்க்ரீனிற்கு சிக்ஸ் தூக்கினார் சேவாக். 21 பந்துகளில் சேவாக் அரைசதம் கண்டார். ஜடேஜாவையும் வாங்க பிரதர் என்று அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசினார் சேவாக். 35 பந்துகளில் 70 ரன்கள் என்று 200% ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்த சேவாகிற்கு நெஹ்ரா 12வது ஓவரின் முதல்பந்தை வீச ரவுண்ட் த விக்கெட் பந்தை லேசாக ஒதுங்கிக் கொண்டு ஒரே தூக்கு.. சிக்ஸ். பிறகு அடுத்த பந்தும் லாங் ஆனில் ரசிகர்களிடையே பந்து தொப்பென்று விழுந்தது, நெஹ்ராவை பிய்த்து உதறிவிட்டார் சேவாக்.

13வது ஓவரில் அஸ்வின் மீண்டும் கொண்டு வரப்பட்டார், ஆனால் சேவக் மேலேறி வந்து செந்தூக்கு தூக்கினார் மீண்டும் நேராக சிக்ஸ். பவுலிங் போட முடியவில்லை யாரும். 16வது ஓவரில் 50 பந்துகளில் தனது 2வது ஐபிஎல் சதத்தை எடுத்தார் சேவாக். 18வது ஓவரை ஜடேஜா வீச லாங் ஆனில் சிக்ஸ். 200 ரன்களை எட்டியது கிங்ஸ் லெவன். அடுத்து எட்ஜ் பவுண்டரி, அடுத்து மீண்டும் ஜடேஜாவை மட்டையடி சிக்ஸ். 18 ரன்களை விளாசினார் அந்த ஒவரில் 57 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து நெஹ்ராவின் புல்டாஸில் எக்ஸ்ட்ரா கவரில் டுபிளெசிஸின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார், தப்பினார் தோனி அன்று அவர் அவுட் ஆகும் போது இன்னும் 11 பந்துகள் பாக்கியிருந்தன. மொத்தம் 12 பவுண்டரிகள் 8 சிக்சர்கள். 58 பந்துகள்ல் 122 ரன்கள். கிங்ஸ் லெவன் 20 ஓவர்களில் 226/6. ஆஷிஷ் நெஹ்ரா 4 ஓவர் 51 ரன்கள், அஸ்வின் 44 ரன்கள், ஜடேஜா 48 ரன்கள் விளாசப்பட்டனர்.

சேவாக் இன்னிங்சை அச்சுறுத்திய ரெய்னாவின் பயங்கர அதிரடி:

மிட்செல் ஜான்சனின் தோளுயர பந்தை புல் ஆட முயன்று டுபிளெசிஸ் முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்த்து வெளியேற, இறங்கினார் ரெய்னா, ட்வைன் ஸ்மித் 7 ரன்களை எடுப்பதற்குள் ரெய்னா ஏதோ மயக்க நிலையில் ஆடியது போல் வெளுத்துக் கட்டினார், நம்ப முடியாத அடி. பவர் ப்ளேயில் இன்று வரை அதிகபட்ச ஸ்கோர் அதுதான் சிஎஸ்கே 100 ரன்களை எட்டியது, ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்கள் என்று பேயாட்டம் ஆடினார். இலக்கை விரட்டும்போது 11.35 என்று இருந்த தேவைப்படும் ரன் விகிதம், ரெய்னாவின் பேயடிக்குப் பிறகு 9.70வாக மாறியது, கிங்ஸ் லெவனின் 226 ரன்களும் சேவாகின் அதிரடியும் ஒன்றுமில்லாமல் போகும் அச்சுறுத்தலை கிங்ஸ் லெவனுக்கு அளித்தார் ரெய்னா. 12 பவுண்டரிகள் 6 சிக்சர்கள்.

ஆனால் அப்போது கிங்ஸ் லெவன் கேப்டன் ஜார்ஜ் பெய்லி, சாமர்த்தியமாக கேப்டன்சியில் ஒரு நகர்வை முன்னெடுத்தார், சேவாக் அடித்து நொறுக்கும் போது வாளாவிருந்த தோனியின் கேப்டன்சிக்கு மாறானது இது, லெக்ஸ்பின்னர் கரண்வீர் சிங்கை பந்து வீச அழைத்தார், மெக்கல்லம் ஸ்ட்ரைக்கில் இருக்கிறார், இவரே அடித்து நொறுக்கியிருக்கலாம், ஆனால் ரெய்னாவின் அனல்பறக்கும் அதிரடியினால் அவருக்கு ஸ்ட்ரைக் கொடுக்க மெக்கல்லம் கொஞ்சம் கூடுதலாகவே முனைப்பு காட்டினார். ஆனால் ஜார்ஜ் பெய்லி வீரர்களை நெருக்கமாகக் கொண்டு வந்தார், மெக்கல்லம் பந்தை லெசாக கவரில் தட்டி விட்டு வேகமாக சிங்கிளுக்கு ஓட கொஞ்சம் தயக்கமும் எழ பெய்லியின் த்ரோ சரியாக ஸ்டம்பைத் தாக்க ரெய்னா ரன் அவுட். ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வர்ணனை மிகச்சரியாகக் கூறியது போல் ‘ஐபிஎல்-ன் சிறந்த இன்னிங்ஸ்’ முடிவுக்கு வந்தது. இதுதான் திருப்பு முனை. குறிப்பாக பர்விந்தர் அவானாவின் ஒரே ஓவரில் ரெய்னா 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 33 ரன்களை விளாசியதை மறக்க முடியாது.

முதல் 6 ஓவர்களில் 100 ரன்கள் காரணம் ரெய்னாவின் காட்டடி. அதன் பிறகு 14 ஓவர்களில் 102 ரன்களையே எடுத்தது சிஎஸ்கே. தோனி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தாலும் 24 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே தோல்வியை அவராலும் தடுக்க முடியவில்லை. ரெய்னா 25 பந்துகளில் 87 ரன்களை எடுக்க முடிந்த போது தோனி 31 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸ்களுடன் 42 நாட் அவுட். பினிஷரால் பினிஷ் செய்ய முடியவில்லை. 202/7 என்று சிஎஸ்கே முடிந்தது.

இந்த வெற்றியையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் முதல் முறையாக இறுதிக்குள் நுழைந்தது, ஆனால் இறுதியில் கொல்கத்தா அணியிடம் தோல்வி தழுவியது. 104 ஐபிஎல் போட்டிகளில் ஆடிய சேவாக் 2,728 ரன்களை 27.55 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

2011 ஐபிஎல் தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக தன் முதல் ஐபிஎல் சதத்தை எடுத்த சேவாக் 2வது சதத்தை முத்தாய்ப்பான சதமாக இறுதிக்குத் தகுதி பெறும் வெற்றி இன்னிங்ஸ் ஆக மாற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x