Last Updated : 25 May, 2020 02:01 PM

 

Published : 25 May 2020 02:01 PM
Last Updated : 25 May 2020 02:01 PM

பாகிஸ்தானிடம் தோற்ற போது கதறி அழுதார் பல்பீர் சிங் : உருக்கத்துடன் நினைவு கூரும் முன்னாள் வீரர் அசோக் குமார்

1975-ம் ஆண்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் அஜித் பால் தலைமையில் இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற போது பல்பீர் சிங் பயிற்சியாளராகவும் மேனேஜராகவும் இருந்தார்.

அந்தத் தொடரில் முதல் போட்டியில் அர்ஜென்டீனாவிடம் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது, அப்போதெல்லாம் அர்ஜெண்டினா ஹாக்கியில் சாதாரணப்பட்ட அணியல்ல என்பது வேறுவிஷயம்.

இந்தப் போட்டியில் தோற்றவுடன் பயிற்சியாளராக இருந்த பல்பீர் சிங் இந்திய அணி வீரர்க்ளுக்கு கொடுத்த உற்சாக டானிக்தான் இந்தியா வென்ற ஒரே ஹாக்கி உலகக்கோப்பை சாதனைக்குக் காரணம் என்று அந்த ஒரே உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் அஜித் பால் மறைந்த பல்பீர் சிங் பற்றி நினைவு கூர்ந்தார்.

இந்த இந்திய அணியில்தான் மேஜர் தயான் சந்த் என்ற லெஜண்டின் மகன் அசோக் குமார் ஆடினார். அப்போது முதல் போட்டியில் தோற்றவுடன் அஜித் பால் சிங் தலைமை இந்திய ஹாக்கி அணியை காலை உணவுக்கு இட்டுச் சென்ற பல்பீர் சிங், ஒரு புத்துணர்வு உரை நிகழ்த்தினார் என்று குறிப்பிட்ட அஜித் பால் சிங் அதன் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை கோப்பையை வென்றோம் என்றார்.

“நாங்கள் முதல் போட்டி தோல்விக்கு பிறகே மனமுடைந்திருந்தோம் அப்போதுதான் பல்பீர் எங்களை காலை உணவுக்காக வெளியில் அழைத்து சென்றார், ஒவ்வொரு வீரரையும் தனித்தனியே அழைத்து உத்வேகமூட்டினார்.

அர்ஜெண்டினாவுக்கு எதிரான தோல்வியை மறந்து விடுங்கள் என்றார் அடுத்ததாக மேற்கு ஜெர்மனியுடன் ஆடுவதில் கவனம் செலுத்துங்கள் என்றார், ஜெர்மனியை 2 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தும் திறமை எங்களிடம் இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

பல்பீர் சிங்கின் ஹாக்கி மீதான கடமைப் பற்றும் அவரது மனித நிர்வாக திறமைகளும் ஒப்பில்லாதது, தாதா தயான் சந்த் சுதந்திரத்துக்கு முந்தைய ஹாக்கியின் தூண் என்றால், பல்பீர் சிங் சீனியர் சுதந்திரத்துக்குப் பிறகான இன்னொரு தூண்” என்றார் 1975 உலகக்கோப்பை ஹாக்கியை வென்ற கேப்டன் அஜித் பால் சிங்.

அன்று பல்பீர் சிங் கொடுத்த புத்துணர்வு உரை, என்ன செய்ய வேண்டும் என்று அவர் கூறியது கோப்பையை வென்றதில் முடிந்தது என்கிறார் அஜித் பால் சிங்.

இந்திய அணி ஜெர்மனியை பல்பீர் சிங் கூறியது போலவே 2 கோல்கள் வித்தியாசத்தில் 3-1 என்று வீழ்த்தியது. அரையிறுதிக்குத் தகுதி பெற்று அதில் போட்டியை நடத்திய மலேசியாவை 3-2 என்று பரபரப்பான போட்டியில் வீழ்த்திய இந்திய அணி அதைவிடவும் இதயப் படப்படப்பை அதிகரிக்கச் செய்யும் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று கோப்பையைத் தூக்கியது.

உ.கோப்பை வெற்றி கோலை அடித்தவர் தயான் சந்தின் மகன் அசோக் குமார்தான்.

அசோக் குமார் 1971 உலகக்கோப்பையின் போது பயிற்சியாளராக இருந்த பல்பீர் சிங் எப்படி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தோற்றப்போது ஹோட்டல் அறையில் உடைந்து போய் கதறி அழுதார் என்பதைப் பகிர்ந்து கொண்ட போது, “

பல்பீர் சிங் இந்திய ஹாக்கியின் பிரகாச நட்சத்திரம். அவரைப்போன்று வர வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம், 1971 உலகக்கோப்பையின் அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் தோற்றபோது பல்பீர் சிங் உடைந்து போய் ஹோட்டல் அறையில் கதறி அழுததைப் பார்த்தோம், பல்பீர் ஒரு லெஜண்ட்.

என் தந்தையையும் இவரையும் ஒப்பிட முடியாது. ஒப்பிடுவது சரியல்ல, இருவரும் இந்திய ஹாக்கியின் ரத்தினங்கள் என்பதில் சந்தேகமில்லை” என்றார் அசோக் குமார்

1971 உலகக்கோப்பையில் வெண்கலம் வென்றது இந்திய அணி, அதிலும் பல்பீர் சிங் பங்களிப்புதான் பெரிது.

அத்தகைய ஹாக்கி மேதையான பல்பீர் இன்று நம்மிடையே இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x