Published : 25 May 2020 08:31 AM
Last Updated : 25 May 2020 08:31 AM

நான் அடிக்கும் போது 4, 6 என்று நினைத்து அடிக்க மாட்டேன்..  ‘அடி’அவ்வளவுதான்: 2வது முச்சதம் சென்னையில் அடித்த பிறகு சேவாக் பேட்டி

சேவாக் பற்றி சுனில் கவாஸ்கர் ஒருமுறை வர்ணனையில் தெரிவித்த தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகும். ஆம். சேவாக் வலைப்பயிற்சியில் நேராக ஆடுவார், தடுப்பாட்ட உத்தியைத்தான் கடைப்பிடிப்பார், ஷாட்கள் ஆடமாட்டார் என்பதே அந்த ஆச்சரியத் தகவல்.

ஆனால் டெஸ்ட், ஒருநாள் போன்ற சர்வதேச களத்தில் அணுகுமுறை அதற்கு நேர் எதிரானது. இரண்டு முச்சதங்களை அடித்து டான் பிராட்மேன், லாராவைச் சமன் செய்த இந்திய வீரர் சேவாக், சென்னையில் தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெய்ன், மகாயா நிடினி, ஜாக் காலிஸ் அடங்கிய பந்து வீச்சை பிரித்து மேய்ந்து 319 ரன்களை எடுத்தார். அன்று சென்னையில் இந்த இன்னிங்சைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷ அதிர்ச்சியில் ஆழ்ந்திருப்பார்கள், தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் நிச்சயம் இருந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்க வாய்ப்பில்லை.

ஜாக் காலிஸ் அந்த இன்னிங்சைப் பற்றி ஒரு முறை கூறும்போது, ‘சரி 50 கடந்து விட்டார் அவுட் ஆவார் என்று பார்த்தோம், 100-ஐ கடந்தா ஆட்டமிழந்து விடுவார் என்று பார்த்தோம் 150,200, 250 என்று அவுட் ஆகி விடுவார் என்று எதிர்பார்த்து சோர்ந்ததுதான் மிச்சம் 319-ல்தான் ஆட்டமிழந்தார்’ என்று வர்ணித்ததை மறக்க முடியாது.

இந்நிலையில் சென்னையில் அடித்த 2வது முச்சதம் பற்றி தி இந்து ஸ்போர்ட்ஸ்டாருக்கு அப்போது அவர் அளித்த பேட்டியில் விஜய் லோகபாலிக்கு கூறும் போது,

“நான் சுயநலமியாக என்றுமே ஆடியதில்லை. அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்க வேண்டும். என் பேட்டிங் குறித்து நிறைய உழைக்கிறேன், என் இன்னிங்சை, என் அணுகுமுறையை நான் திட்டமிடுகிறேன். நான் ஒவ்வொரு பந்தையும் அடிப்பதில்லை, நான் ஆடாமல் விடும் பந்துகளும் உண்டு. அடிக்க வேண்டிய பந்துகளை தேர்ந்தெடுக்கிறேன்.

சென்னையில் இந்த இன்னிங்சின் போது கூட முதல் 4 பந்துகளை தடுத்தாடினேன், கடைசி 2 பந்துகளில் பவுண்டரி அடித்தேன். ஏனெனில் அவை அடிக்க வேண்டிய பந்துகள். நான் அடிக்கும் போது அது பவுண்டரிக்குப் போகவேண்டும் சிக்சராக வேண்டும் என்று கருதி அடிப்பதில்லை, அடிக்கிறேன் அவ்வளவுதான்.

2வது முச்சதம் மகிழ்ச்சியளிக்கிறது. எந்த பேட்ஸ்மெனும் ‘கார்ட்’ எடுக்கும் போதே முச்சதம் அடிக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. ஆனால் அது நடக்கும் போது அது ஒரு அரிதான அனுபவமாக உள்ளது. அதில் மூழ்குவதற்கு கொஞ்சம் நேரமாகும்.

முல்டானில் அடித்த முதல் முச்சதம் ஸ்பெஷல் ஏனெனில் இந்திய பேட்ஸ்மென் ஒருவரின் முதல் முச்சதம் அது. நீங்கள் ஒப்பிடச் சொன்னதால் ஒப்பிடுகிறேன் சென்னையில் அடித்த முச்சதம் அதை விட சற்று சிறந்தது.

அணியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து ஏதாவது பாடம்..

என்னைக் காயப்படுத்தியது ஆனால் என்னை சீர்படுத்தியது. கிரீசில் அதிக நேரம் செலவிட வேண்டும் என்பதை நான் அறிந்திருந்தேன். என் ஆக்ரோஷ பேட்டிங் முறையையும் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டேன். நல்ல தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்ற வேண்டும். விக்கெட்டைத் தூக்கி எறியாதே. 50 ரன்களைக் கடந்தால் 100ஐ நோக்கி நடைபோடு. ஷாட் தேர்வில் கவனமாயிரு. இவற்றையெல்லாம் சச்சின் டெண்டுல்கரிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

இவ்வாறு அந்த பேட்டியில் அப்போது கூறியிருந்தார் விரேந்திர சேவாக்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x