

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படும் என்ற செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் அதனை ஐபிஎல் நடத்த வாய்ப்பாக பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்ற ஐயங்கள் பலருக்கும் எழ, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அதாவது உலகக்கோப்பை டி20 ஐசிசி நிகழ்வு, ஆனால் இந்திய-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் இருதரப்பு தொடர், இதில் ஆஸி.க்கு வருமானம் அதிகம் இதனால் இதனை நடத்தவும் உலகக்கோப்பையை ஒழிக்கவும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா வேலை செய்து வருவதாகத் தெரிகிறது.
அப்படி ஒருவேளை உலகக்கோப்பை டி20 நடைபெறாவிட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தலாமே என்று பிசிசிஐ நாக்கைச் சப்புக் கொட்டி வருகிறது.
இதனையடுத்து ஆலன் பார்டர் கூறியதாவது:
உள்நாட்டு டி20 தொடருக்கு ஏன் முக்கியத்துவம்? உலக டி20தான் நடக்க வேண்டும். எனவே உலகக்கோப்பை டி20 நடக்கவில்லை என்றால் ஐபிஎல் கிரிக்கெட்டும் நடக்கக் கூடாது.
நிச்சயம் அப்படி நடந்தால் நான் கேள்வி எழுப்புவேன். இது நிச்சயம் பணத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவமாகும். உலக டி20க்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அப்படி ஐபிஎல் தொடர் நடந்தால் நிச்சயம் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை அனுப்பக் கூடாது, ஒரு எதிர்ப்பாக இதனைச் செய்ய வேண்டும்.
இவ்வாறு சாடினார் ஆலன் பார்டர்.