Published : 08 May 2014 10:00 AM
Last Updated : 08 May 2014 10:00 AM

களத்தில் மோதல்: ஸ்டார்க், பொல்லார்டுக்கு அபராதம்

களத்தில் நேரடியாக மோதலில் ஈடுபட்ட மும்பை இண்டியன்ஸ் அணி வீரர் பொல்லார்ட், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் மைக்கேல் ஸ்டார்க் ஆகியோருக்கு அபராதம் விதிக்கப் பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியில் மும்பை – பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொல்லார்டுக்கு ஸ்டார்க் பந்து வீசியபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நடுவரும், சகவீரர்களும் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர்.

இந்த மோதலின்போது பொல்லார்ட், ஸ்டார்க்கை நோக்கி தனது பேட்டை வீசினார். இதற்காக அப்போட்டிக்கான சம்பளத்தில் 75 சதவீதத்தை அவர் அபராதமாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல ஆட்டத்தில் ஒழுக்கத்தையும், உத்வேகத்தையும் குலைக்கும் வகையில் நடந்து கொண்டதற்காக ஸ்டார்குக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர போட்டியின்போது பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.24 லட்சமும், பெங்களூர் கேப்டன் விராட் கோலிக்கு 12 லட்சமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ரோஹித்துக்கு இந்த ஐபிஎல்-லில் இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர போட்டியில் விளையாடிய மும்பை அணி வீரர்கள் அனைவரும் குறைந்தது ரூ.6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் 25 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் உடை விதிகளை மீறியதாக பெங்களூர் பந்து வீச்சாளர் வருண் ஆரோனுக்கு கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x