Published : 06 May 2020 08:50 AM
Last Updated : 06 May 2020 08:50 AM

நான் சம்பாதித்த பணத்தை என் எஞ்சிய வாழ்நாளில் செலவு செய்ய முடியாது; விவசாயியாக மாறப்போகிறேன், உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்கப்போகிறேன்- ஹர்பஜன் சிங் உருக்கம்

கரோனா பிரச்சினை முடிந்ததும் விவசாயியாக மாறி உணவு தானியங்களைப் பயிரிட்டு அதை வசதியற்ற ஏழைகளுக்கு அளிக்கப்போவதாக ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராம் உரையாடலில் தெரிவித்துள்ளார்.

ஹர்பஜன், அஸ்வின் இருவரும் இன்ஸ்டாகிராமில் உரையாடல் நிகழ்த்தினர் அதில் ஹர்பஜன் சிங் கூறியதாவது:

மனிதர்களுக்கு சில பாடங்களைக் கற்பிக்கவே கரோனா வைரசை கடவுள் கொடுத்துள்ளார்.

வீட்டில் இல்லாமல் ஓடினோம், பணத்தின் பின்னால் ஓடினோம், பேராசையுடன் வாழ்ந்தோம், கரோனாவை கொடுத்து பணம் மட்டுமே முக்கியமல்ல என்பதை கடவுள் உணர்த்தியிருக்கிறார்.

நான் சம்பாதித்த பணத்தை என் எஞ்சிய வாழ்நாளில் செலவு செய்ய முடியாது, அந்த அளவுக்கு பணம் தேவையில்லை. நமக்கு இப்போது தேவை பிறர் மீதான அன்பும் அரவணைப்பும்தான், இதைத்தான் கரோனா நமக்குக் கற்றுத் தந்துள்ளது.

ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும், எளிமையாக வாழ வேண்டும், இதைத்தான் கரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.

கரோனா முடிந்ததும் பஞ்சாப் திரும்பி நிறைய நிலம் வாங்கவுள்ளேன். காய்கறி, கோதுமை பயிரிட்டு விவசாயியாக மாறவிருக்கிறேன்.

விளையும் தானியங்களை கோயிலுக்கும், ஏழை எளியவர்களுக்கும் இலவசமாக வழங்குவேன். பணத்தை தேடி அலைந்தது போதும் என்று கருதுகிறேன், இதில்தான் எனக்குத் திருப்தி இருக்கிறது.

இவ்வாறு கூறினார் ஹர்பஜன் சிங்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x