Last Updated : 04 Aug, 2015 09:37 AM

 

Published : 04 Aug 2015 09:37 AM
Last Updated : 04 Aug 2015 09:37 AM

வங்கதேசம்- தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் சமனில் முடிந்தது: டாக்கா டெஸ்ட் டிரா

வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. முதல் டெஸ்ட் போட்டி ஏற்கெனவே டிராவான நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியும் டிராவில் முடிந்ததால் இரு போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் சமனில் (0-0) முடிந்தது.

வங்கதேச தலைநகர் டாக்கா வில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 88.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு தொடர் மழை காரணமாக அடுத்த 3 நாள் ஆட்டங்கள் கைவிடப்பட்டன. 5-வது நாளான நேற்று மைதானம் ஈரப்பதமாக இருந்ததால் ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது. இதை யடுத்து போட்டி டிராவில் முடிந்தது.

வழக்கமாக வங்கதேசத்தில் ஜூன் 15-ம் தேதி முதல் மழைக்காலம் தொடங்கிவிடும். அது ஆகஸ்ட் வரை நீடிக்கும். இந்தக் காலங்களில்தான் 80 சதவீத மழைப் பொழிவு இருக்கும். அதுவும் இந்த முறை புயல் காரணமாக தொடர் மழை பெய்து வருவதால் வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் முழுமையாக பாதிக்கப்பட்டது.

ஆம்லா ஏமாற்றம்

இந்தத் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹசிம் ஆம்லா கூறுகையில், “நான் விளையாடிய தொடர்களில் இது வழக்கத்துக்கு மாறான ஒன்று ஆகும். 10 நாட்களைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 6 நாட்கள் மழையால் பாதிக்கப்படும் என நான் நினைக்கவில்லை” என்றார்.

வேறு வழியில்லை

மழைக்காலத்தில் இந்தத் தொடரை நடத்திய தங்களின் முடிவு சரியே என வங்கதேசம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி கூறுகையில், “இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் ஏராளமான தொடர்களில் விளையாடி வருவதால் வேறு தேதிகள் கிடைக்கவில்லை. அதனால்தான் இந்தத் தொடரை மழைக்காலத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த முறை இந்தத் தொடரை நடத்தாவிட்டால், அடுத்த தொடரை நடத்துவதற்காக 2023-ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

இந்திய அணியை இங்கு அழைத்து விளையாட வைப்பது கடினமான விஷயமாகும். ஏனெனில் அவர்கள் ஏராளமான கிரிக்கெட் தொடர்களில் விளையாடிக் கொண்டிருப்பது நமக்குத் தெரியும். அதனால் இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை ஜூன் மாதத்தில் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

முஷ்பிகுர் ரஹிம்

வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில், “எங்களுடைய கிரிக்கெட் சீசனான அக்டோபர் முதல் மே வரையிலான காலத்தில் பெரிய அணிகளுடன் விளையாட நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அந்தக் காலங்களில் பெரிய அணிகள் வேறு தொடர்களில் விளையாடிக் கொண்டிருக்கின்றன. பெரிய அணிகளுடன் நிறைய போட்டிகளில் விளையாடும்போது நிறைய கற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

தரவரிசையில் மாற்றமில்லை

வங்கதேசம்-தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் 0-0 என டிராவில் முடிந்திருந்தாலும், தரவரிசையில் மாற்றமில்லை. தென் ஆப்பிரிக்க அணி 5 ரேட்டிங் புள்ளிகளை இழந்தபோதிலும், தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது. எனினும் தென் ஆப்பிரிக்காவுக்கும், மற்ற அணிகளுக்குமான ரேட்டிங் புள்ளி இடைவெளி குறைந்துள்ளது. 6 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்ற வங்கதேச அணி தொடர்ந்து 9-வது இடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x