Last Updated : 13 Apr, 2020 02:37 PM

 

Published : 13 Apr 2020 02:37 PM
Last Updated : 13 Apr 2020 02:37 PM

ஒன்றரை ஆண்டு விளையாடாதவர்; ஐபிஎல் மட்டும் நடக்காவிட்டால் தோனி வாழ்க்கை? ராகுலைத் தேர்வு செய்யுங்கள்: கவுதம் கம்பீர் கணிப்பு

தோனி, கம்பீர், : கோப்புப்படம்

மும்பை

இந்த ஆண்டு மட்டும் ஐபிஎல் போட்டி நடைெபறாத சூழல் ஏற்பட்டால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறியாகும். இந்திய அணிக்குள் தோனி வருவதும் கடினமாகிவிடும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்தார்.

உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக இருந்தே தோனியின் பேட்டிங் ஃபார்மில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தன. உலகக்கோப்பை போட்டியில் தோனியின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக தோனியின் பேட்டிங், ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்குத் தள்ளியது. இதனால், உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

மே.இ.தீவுகள் தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர், வங்கதேசத் தொடர், நடைபெற உள்ள மே.இ.தீவுகள் தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. இதனால் தோனி விரைவில் ஓய்வு பெற உள்ளாரா என்ற பேச்சு எழுந்தது.

ஆனால், அதுகுறித்து எந்தவிதமான கருத்தையும் தோனி தெரிவிக்கவில்லை. தேர்வுக்குழு முன்னாள் தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் பேசுகையில், ''ஓய்வு என்பது தோனியின் சொந்த முடிவு. இதில் நாம் தலையிட முடியாது" எனத் தெரிவித்தார்.

இந்த சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில், "2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டித் தொடர் முடிந்தபின் தோனியின் எதிர்காலம் குறித்த தெளிவான முடிவு கிடைத்துவிடும்" எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், முன்னாள் வீரர்கள் கபில் தேவ், சுனில் கவாஸ்கர் ஆகியோரும் தோனி நீண்டநாட்கள் ஓய்வில் இருந்தால் மீண்டும் அவரால் அணிக்குள் வர இயலாத நிலை ஏற்படலாம் என்று தெரிவித்தனர்.

ஆனால், தற்போது கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவியதையடுத்து மார்ச் 29-ம் தேதி தொடங்க வேண்டிய ஐபிஎல் டி20 போட்டிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகள் குறைந்த எண்ணிக்கையில் நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டி ரத்தானால் அணி நிர்வாகிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், ஐபிஎல் போட்டிகள் நடக்கும் நம்பிக்கையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சென்னை சேப்பாக்கத்தில் ஒருவாரம் பயிற்சியில் ஈடுபட்டார். கரோனா தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து அவர் பயிற்சியை முடித்துக்கொண்டு ஜார்க்கண்ட் சென்றார்.

இந்தச் சூழலில் தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடி திறமையை நிரூபிக்கும் பட்சத்தில்தான் இந்திய அணிக்குள் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஐபிஎல் நடக்கவில்லை என்றால் தோனியின் நிலையை யாராலும் ஊகிக்க முடியாது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் மும்பையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்த ஆண்டு ஐபிஎல் டி20 போட்டிகள் நடக்காவிட்டால் தோனியின் நிலை கேள்விக்குறிதான். அவரால் இந்திய அணிக்குள் நுழைவது கடினமாகிவிடும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தோனி ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருந்தால் எந்த அடிப்படையில் அவரை மீண்டும் அணிக்குள் தேர்வு செய்வார்கள்?

தோனிக்குப் பதிலாக கீப்பிங் பணிக்கு கே.எல்.ராகுலைத் தேர்வு செய்யுங்கள். தோனி அளவுக்கு கீப்பிங் செய்யாவிட்டாலும், டி20 போட்டிகளுக்கு விக்கெட் கீப்பிங், பேட்டிங், 3 அல்லது 4-வது இடத்தில் அதிரடியாக ஆடச் சிறந்த வீரர். தோனியின் ஓய்வு என்பது அவரின் சொந்த முடிவு” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x