Published : 05 Apr 2020 06:03 PM
Last Updated : 05 Apr 2020 06:03 PM

கேட்சை விட்டதற்காக தோனியையும் திராவிடையும் திட்டித் தீர்த்த விவகாரம்: அசைபோடும் ஆஷிஷ் நெஹ்ரா

வேகப்பந்து வீச்சாளர்கள் சில வேளைகளில் பேட்ஸ்மென்கள் சக வீரர்களையே வசைபாடும் தருணங்கள் கிரிக்கெட்டில் நிறைய உண்டு. சச்சின் டெண்டுல்கர் தனது பிரபல ஷார்ஜா இன்னிங்ஸில் விவிஎஸ் லஷ்மணை ரன் ஓடாததற்காகக் கடுமையாக பேசியதை பலரும் வீடியோவில் பார்த்திருப்பார்கள்.

ஷேன் வார்ன் ஒரு பவுலரை, ‘பீல்டிங்கும் வராது, பவுலிங்கும் வராது , எதுவும் வராது’என்று கூறியது பிரபலம். ஸ்ரீகாந்த் கிரீசுக்கு வெளியே சும்மா நடந்து வந்து ரன் அவுட் ஆன போது கவாஸ்கர் எதிர்முனையில் வெறுப்பை உமிழ்ந்ததை அறிவோம், சேத்தன் சர்மா பவுண்டரியில் மிஸ்பீல்ட் செய்த போது கபில்தேவ் ஒருமுறை கையைத்தட்டி கிண்டல் செய்ய சேத்தன் சர்மா தன் குருநாதரின் கிண்டலை பொறுக்க முடியாமல் அழுததையும் பார்த்திருக்கிறோம்.

அந்த வரிசையில் 2005-ல் பாகிஸ்தானுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தோனி டீமுக்கு வந்த புதிது , அகமதாபாத்தில் நடந்த ஒருநாள் போட்டி அது. நடந்தது என்னவெனில் பாகிஸ்தான் அதிரடி பேட்ஸ்மென் ஷாகித் அஃப்ரீடி 10 ரன்களில் ஆடிக் கொண்டிருந்தார். நெஹ்ரா வீசிய பந்து எட்ஜ் ஆக தோனி, திராவிட் இருவருக்கும் இடையே கேட்ச் ஆகச் செல்லும் இருவரும் பிடிக்க மாட்டாகர்கள், இது ஒரு பிரசித்தமான காட்சி.

அப்போது வெறுப்படைந்த ஆஷிஷ் நெஹ்ரா தோனியை நோக்கி சிலபல வார்த்தை வசைகளை வீசி எறிவார். ராகுல்திராவிட்டையும் விட்டு வைக்கவில்லை.

இந்தச் சம்பவம் குறித்து ஆஷிஷ் நெஹ்ரா தற்போது ஒரு நேர்காணலில் கூறும்போது, “எனக்கு தனியாக அந்தச் சம்பவம் நினைவிலிருக்கிறது. தொடரிம் 2வது போட்டி, வைரலான அந்த வீடியோவில் நான் தோனியைச் சாடியதைப் பார்த்த போது நினைவுக்கு வருகிறது, எட்ஜ் ஒன்று அப்ரீடி மட்டையிலிருந்து தோனிக்கும் திராவிட்டுக்கும் இடையே சென்றது.

ஆனால் என் நடத்தை குறித்து நான் நிச்சயமாகப் பெருமையடையவில்லை. அதற்கு முதல் பந்தில்தான் அஃப்ரீடி என்னை ஒரு சிக்ஸ் அடித்திருந்தார். அடுத்த பந்தே வாய்ப்பு வந்தும் கோட்டை விட்டபோது உணர்ச்சிவயப்பட்டேன். ஆனால் அது முதல் முறையல்ல. ஆனால் போட்டி முடிந்த பிறகு திராவிடும், தோனியும் என்னுடன் நல்லபடிதான் பழகினர். ஆனால் அது என் நடத்தையை நியாயப்படுத்தாது” என்றார்.

அந்தப் போட்டியில் நெஹ்ரா பாவம் 9 ஓவர்களில் 75 ரன்களை விட்டுக் கொடுப்பார், ஷாகித் அஃப்ரீடி 23 பந்துகளில் 40 ரன்களை எடுக்க பாகிஸ்தான் அணி 316/7 என்று இலக்கை விரட்டி வெற்றி பெறும். இன்சமாம் தலைமையில் பாகிஸ்தான் இங்கு வந்து 4-2 என்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x