Last Updated : 02 Apr, 2020 09:46 PM

 

Published : 02 Apr 2020 09:46 PM
Last Updated : 02 Apr 2020 09:46 PM

மறக்க முடியுமா இந்த நாளை: 28 ஆண்டுகளுக்குப்பின் நிறைவேறிய கனவு: தோனியின் வின்னிங் ஷாட் சிக்ஸர்; கம்பீரின் கடின உழைப்பு: உலகை திரும்பி பார்க்க வைத்த இந்திய அணி

உலகக்கோப்பை வெற்றியில் சச்சினை கொண்டாடிய சக இந்திய அணி வீரர்கள்.

“ இதைக்காட்டிலும் வேறு எதையும் நான் எதி்ர்பார்த்திருக்க முடியாது. உலகக்கோப்பைையை வென்றதுதான் என் வாழ்வில் பெருமைக்குரிய தருணம். என்னுடைய அணியில் உள்ள அனைவருக்கும் அன்பார்ந்த நன்றிகள். அவர்கள் இல்லாமல் நிச்சயம் இது நடந்திருக்காது. என் கண்களில் இருந்து வரும் ஆனந்தத்தின் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை”

இந்த உணர்ச்சிச் செறிவுள்ள, ஆகச்சிறந்த வார்த்தைகள் தோனி பேசியது அல்ல, 6 உலகக்கோப்பைகளில் விளையாடி ஒருமுறை கூட நாட்டுக்காக கோப்பையை வென்று கொடுக்கமுடியவில்லையே என்ற ஆதங்கத்தில், வெறியில் இருந்த மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் பேசியது.

இப்போது தெரிந்திருக்கும்..... 2011, ஏப்ரல் 2ம் தேதி இந்திய கிரிக்கெட் அணிக்கு எப்படி எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருந்திருக்கும்.

2011-ஏப்ரல் 2-ம் தேதி இந்திய அணி தோனி தலைைமயில் உலகக்கோப்பையை 2-வதுமுறையாக வென்றது. கபில்தேவ் தலைமையில் 1983-ம் ஆண்டு வென்றபின் மீண்டும் எப்போது வெல்லப்போகிறோம் என்று காத்திருந்த இந்திய ரசிகர்களுக்கு அந்த நாள் மறக்க முடியாத நாள்.

அன்றைய உலககக்கோப்பை வென்ற அணியில் இருந்த வீரர்களில் 6 பேர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்.

உலகக்கோப்பைப் போட்டியில் அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் ஒவ்வொரு வீரர்கள் பங்காற்றினார்கள். குறிப்பாக காலிறுதியில் யுவராஜ் சிங் சிறப்பாக விளையாடாமல் இருந்திருந்தால் அப்போதே ஆஸ்திரேலியாவிடம் வெற்றியை இந்திய அணி தாரைவார்த்திருக்கும்.

அரையிறுதியில் சச்சின் விளையாடாமல் இருந்திருந்தால் பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை இந்தியா அடைந்திருக்கும், இறுதிப்போட்டிக்கு வந்திருக்க முடியாது. இப்படி முக்கியமான தருணங்களில் ஒவ்வொரு வீரரின் பங்களிப்பும் உலகக்கோப்பையில் இருந்தது.

இறுதிப்போட்டியில் கவுதம் கம்பீரின் விடா முயற்சியுடன் கூடிய அபாரமான பேட்டிங், தொடர் முழுவதும் பேட்டிங்கில் சொதப்பிய கேப்டன் தோனி அதிர்ஷ்டவசமாக இறுதிப்போட்டியில் விளையாடியது மறக்கமுடியாத நினைவு. தோனியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு சிறிதளவும் குறையாமல் கம்பிரின் பங்களிப்பும் போற்றப்பட வேண்டியதுதான்.

ஆனால், வரலாறு என்னவோ கேப்டன் என்ற ஒற்றை மனிதருக்கு மட்டுமே வெற்றியின் மகுடத்தை சூட்டி வைத்து அழகு பார்க்கிறது, அனைத்து குதிரைகளும் இல்லாமல் நிச்சயம் தேரோட்டியால் தேரைச் செலுத்தியிருக்க முடியாது.

அப்போது இருந்த அணியில் இந்திய அணி எந்த இடத்தில் விழுந்தாலும் அணியைத் தூக்கிவிட அடுத்தவரிசையில் வீரர்கள் தயாராக இருந்தனர். அது பந்துவீீச்சாக இருந்தாலும், பேட்டிங்காக இருந்தாலும் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். தொடக்கவரிசை, ஓன்டவுன், நடுவரிசை, கீழ்வரிசை என அனைத்திலும் பேட்டிங்கிற்கு சிறந்த வீரர்கள் இருந்தார்கள்.

குறிப்பாக இலங்கை அணிக்கு எதிரான இறுதிப்போட்டியின் போது சேவாக், சச்சின் விரைவாக ஆட்டமிழந்தவுடன் ரசிகர்கள் தலையில் கைவைத்தார்கள், அழுதார்கள். ஆனால், கம்பீர், விராட் கோலி பாட்னர்ஷிப் இந்திய அணியை வெற்றிக்கு நகர்த்தியது. அந்த தொடரில் கம்பீரும், யுவராஜ்சிங்கும் முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்தனர்.

ஸ்டைலிஷான இடதுகை ஆட்டக்காரர் கம்பீர் அற்புதமான இன்னிங்ஸ்ஆட, கோலி துணை நின்றார். கோலி ஆட்டமிழந்தபின் யுவராஜ் சிங் களமிறங்குவார் என காத்திருந்தபோது, யாரும் எதிர்பாராத சூழலில் கேப்டன் தோனி வந்தார். லீக் ஆட்டங்கள், காலிறுதி,அரையிறுதி என எதிலும் ரன்சேர்க்காமல் பேட்டிங்கில் சொதப்பிய தோனி, எதற்காக வந்தார் என ரசிகர்கள் சிந்தித்தனர்.

ஆனால், அனைவரின் கணிப்பையும் மாற்றும் விதத்தில் தோனியின் ஆட்டம் அமைந்தது. கம்பீரும், தோனியும் ஏறக்குறைய இந்திய அணியை வெற்றிக்க அருகே கொண்டு சென்றனர். ஆனால், என்ன துரதிர்ஷ்டம் கம்பீர் 3 ரன்னில் சதத்தை நழுவவிட்டார். தோனி தனது பொறுமையான ஆட்டத்தின் மூலம்,யுவராஜ் சிங் துணையின் மூலம் வின்னிங் சிக்ஸர் அடிக்க கோப்பையை வென்றது இந்திய அணி.

இந்த உலகக்கோப்பைத் தொடர் இந்திய வீரர்களுக்கு பல அழுத்தங்களை எவ்வாறு கொடுத்திருந்தது என தோனி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். பல வீரர்கள் ஓய்வறையில் தூங்காமல் நாள்தோறும் சிரமப்பட்டுள்ளனர், மனஅழுத்தம் காரணமாக வீரர்கள,சரியாகச் சாப்பிடவில்லை,அதிலும் யுவராஜ் சி்ங், ரெய்னா போன்றோர் மனஅழுத்தத்தால் நள்ளிரவில் வாந்தி எடுத்து உடல்நலன் குன்றினர் என்று வெற்றியின் வலியை தோனி பகிர்ந்திருந்தார்.

ஆனால், இந்த வெற்றிக்குப்பின் சில கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஒன்று அனைத்துப்போட்டிகளிலும் நடுவரிசையில் யுவராஜ்சிங் களமிறங்கி பல வெற்றிகளை எளிதாக்கி வந்தநிலையில் இறுதிப்போட்டியி்ல் தோனி ஏன் யுவராஜ் சிங்இடத்தில் களமிறங்கினார். இந்த உலகக்கோப்பைப் போட்டிக்குப்பின்புதான் தோனியின் மார்க்கெட் உச்சத்துக்கு சென்றது, ரசிகர்களின் மனதிலும் உயரத்துக்கு சென்றார் என்பதையும் மறக்க முடியுமா.

இரண்டாவது கம்பீருக்கு சதம் அடிக்க வேண்டும் எனும் விஷயத்தை தோனி நினைவுபடுத்தியதால்தான் அவர் சதம் அடிக்க முடியாமல் பதற்றத்துடன் ஆட்டமிழந்தார் என சலசலப்பும் வந்தது. இதை கம்பீர் நீண்டகாலத்துக்குப்பின் சமீபத்தில் தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ஆக மிகப்பெரிய மகிழ்ச்சி, ஆரவாரம், கொண்டாட்டங்களுக்குப்பின் இதுபோன்ற சிறு சிறு சலசலப்புகளும் சருகுகளாக மேலே வரத்தான் செய்கின்றன.

டாஸ்வென்ற இலங்கை கேப்டன் சங்கக்கக்கரா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ஜார்கானும், ஹர்பஜனும் தொடக்கத்திலேயே தாரங்கா,தில்சன் வி்க்கெட்டை வீழ்த்தி அதி்ர்ச்சி அளித்தனர். ஆனால், சங்கக்கரா, ஜெயவர்த்தனா ஜோடி ஆட்டத்தைக் கையில் எடுத்து அணியை முன்னெடுத்தனர்.

சங்கக்கராவை 48 ரன்னில் யுவராஜ் சிங் வெளியேற்றினார். அதன்பின் வந்த சமரவீரா(21) கபுகதேரா(1), குலசேகரா(32) பெரேரா(22) என ஆட்டமிழந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஜெயவர்த்தனா சதம் அடித்து 103 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 50 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் சேர்த்தது.

ஜாகீர்கான் 3 மெய்டன் கொடுத்து தொடக்கத்தில் சிறப்பாக பந்தவீசி கடைசி நேரத்தில் சொதப்பி 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்ரீசாந்த்,முனாப் படேல் இருவரும் விக்கெட் வீ்ழ்த்தவில்லை, யுவராஜ் சிங் 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். லீக் ஆட்டங்களில் சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் அஸ்வின் பைனலுக்கு தேர்வு செய்யப்படாதது பெரும் சர்ச்சையாகவும் இருந்தது

275 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு 2வது பந்திலேய மலிங்கா அதிர்ச்சி அளித்தார். சேவாக் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறினார். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 18ரன்னில் மலிங்காவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருவரும் சென்றபின் இந்திய அணியின் நிலைமை அவ்வளவுதானா, என்று ரசிகர்கள் தலையில் கைவைத்தார்கள். ஆனால்,கம்பீர், கோலி ஜோடி நம்பிக்கை அளித்து அணியை முன்னெடுத்தனர். 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணிதடுமாறிய நிலையில் இருவரும் சேர்ந்து 83 ரன்கள்சேர்த்தார்கள். தில்சன் பந்துவீச்சில் கோலி 35 ரன்னில் வெளியேறினார்.

கம்பீர் அரைசதத்துடன் களத்தில் நின்றபோது யுவராஜ்சிங்கை அனைவரும் எதிர்பார்க்க தோனி களமிறங்கினார். தன்னுைடய மோசமான பேட்டிங் ஃபார்மை மறந்து தோனி சிறப்பாக விளையாடத் தொடங்கினார். இருவரும் 109 ரன்கள் சேர்த்தனர். சதத்தை இழந்து கம்பீர் 97 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த யுவராஜ் சிங், தோனியுடன் சேர இருவரும் அணிய வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். குலசேகரா வீசிய 49-வது ஓவரின் 2-வது பந்தில் தோனி லாங்-ஆன் திசையில் வின்னிங் ஷாட் சிக்ஸர் அடிக்க இந்திய அணி 2-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது

ஆட்டநாயகனாக தோனியும், தொடர் நாயகனாக யுவராஜ் சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர். தோனிக்கு மட்டுமல்லாமல் கம்பீருக்கம் ஆட்டநாயகன்விருது கொடுத்திருக்க வேண்டும் என்பது அப்போது ரசிகர்களின் முனுமுனுப்பாக இருந்தது.

எப்படியாகினும் பயிற்சியாளர கேரி கிறிஸ்டன் வழிகாட்டலில் இந்தியஅணி உலகக்கோப்பையை வென்ற, 2011, ஏப்ரல் 2-ம் தேதியை இந்திய ரசிகர்களால் மறக்கமுடியுமா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x