கரோனாவுக்கு எதிரான போர்: ரோஹித் சர்மா ரூ.75 லட்சம் நிதியுதவி

கரோனாவுக்கு எதிரான போர்: ரோஹித் சர்மா ரூ.75 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

கரோனா வைரஸுக்கு எதிரான போருக்கு உதவும் வகையில், ரோஹித் சர்மா ரூ.75 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 1,251 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 32 பேர் கரோனா வைரஸ் பாதிப்பில் பலியாகியுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் லாக்-டவுன் திட்டத்தை அமல்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு தாராளமாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். மேலும், பல்வேறு மாநில முதல்வர்களும், முதல்வர் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்க அழைப்பு விடுத்திருந்தனர். இதற்கு பல்வேறு பிரபலங்கள், நிறுவனங்கள் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவும் நிதியுதவி வழங்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"நம் தேசம் மீண்டும் தனது காலில் நிற்க வேண்டும். அந்தப் பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது. நாம் பிரதமரின் நிவாரண நிதிக்கு எனது பங்காக ரூ.45 லட்சத்தையும், மஹாராஷ்டிரா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தையும், ஃபீடிங்க் இண்டியா மற்றும் ஆதரவில்லாத நாய்களின் நலனுக்கான அமைப்புக்கு தலா ரூ.5 லட்சத்தையும் அளித்துள்ளேன். நமது தலைவர்களுக்குப் பின்னால் நின்று அவர்களை ஆதரிப்போம்".

இவ்வாறு ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in