

கிரிக்கெட் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதித்து உலக அளவில் அதிக பணம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒரு கட்டத்தில் டாப் 10-ல் இருந்த தோனி ஒரு காலத்தில் தன்னிடம் இப்படிக் கூறியதாக வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
அதாவது சிறிய நகரங்களிலிருந்து வரும் வீரர்கள் எப்படி பெரிய ஆசையெல்லாம் வைத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் சிறிய லட்சியங்களே அவர்களுக்குப் போதும் என்று கூறும் வாசிம் ஜாஃபர் தோனியுடன் ஆரம்ப காலக்கட்டத்தில் ஓய்வறையில் பழகியுள்ளார்.
சமூக ஊடகத்தில் ரசிகர்களின் கேள்விக்குப் பதில் அளித்த வாசிம் ஜாஃபர். ‘தோனியுடனனான இனிய நினைவு என்ன?’என்ற கேள்விக்கு, வாசிம் ஜாஃபர் பதிலளித்த போது, “இந்திய அணியில் அவரது ஆரம்ப ஒன்றாம் ஆண்டு அல்லது 2-ம் ஆண்டில் தோனி கூறியது இன்றைக்கும் நினைவில் உள்ளது, கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் சம்பாதித்தால் போதும் அதன் பிறகு மீதி வாழ்க்கையை ராஞ்சியில் நிம்மதியாகக் கழித்து விடுவேன், என்று கூறினார்” என வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
ஆனால் மிகப்பெரிய வர்த்தகப் புலியான தோனி தற்போது ஐபிஎல் கிரிக்கெட் மூலம் ஒரு பெரிய வணிக பிராண்டாகியுள்ளார்.
ஒரு முறை இவரைப்பற்றிய புத்தகம் ஒன்றில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் பகிர்ந்த ஒரு விஷயம், ஒருமுறை, ஒரு வர்த்தகம், அதாவது ஒரு விளம்பர ஒப்பந்தம் கைநழுவிப் போன போது தன் வர்த்தக மேலாளரைக் கடுமையாக தோனி சாடினார், கேப்டன் கூல் அல்ல என்று எழுதியிருந்தார்.
ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் ராஜ்தீப் சர்தேசாய் எழுதி MS Dhoni: Indian cricket's first mega-brand என்று அக்டோபர் 25, 2017-ல் வெளியான இந்தக் கட்டுரையில் அவர் மேலும் எழுதிய போது, தோனிக்கு பெரிய அளவில் வர்த்தக லாபம் தொடர்புடைய ரீதி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் பங்கு இருந்தது என்றும் இந்திய மற்றும் சிஎஸ்கே வீரர்கள் ஒப்பந்தங்களையும் ரீதி ஸ்போர்ட்ஸ் நிறுவனமே கையாண்டது என்ற செய்தியின் விவரங்கள் 2013-ல் வெளியானதாக அதே கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
கிரிகெட்டின் ஆரம்ப காலத்தில் வாசிம் ஜாஃபர் கூறுவது போல் ‘கிரிக்கெட் மூலம் ரூ.30 லட்சம் சம்பாதித்தால் போதும் ராஞ்சியில் மீதி வாழ்க்கையை நிம்மதியாகக் கழித்துவிடுவேன்’ என்று தோனி கூறினார் என்றால் 2017-ல் “ஒருவருக்கு வாழ்க்கையில் எவ்வளவு தேவைப்படுமோ அதை விடவும் என்னிடம் பணம் அதிகமாகவே உள்ளது’ என்று கூறியதாக மேற்கூறிய ஈஎஸ்பிஎன் கட்டுரையில் தோனியை மேற்கோள் காட்டுகிறார் ராஜ்தீப் சர்தேசாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.